பங்குச் சந்தையில் மாஸ் காட்டிய ஈரோடு நிறுவனம்… முதல் நாளே 30% அதிரடி ஏற்றம்!

Spread the love

ஈரோட்டில் தயிர்பாளையம் கிராமத்தில் சிறிய அளவில் தொடங்கிய மில்கி மிஸ்ட் பயணம் இன்று இந்தியாவின் முன்னணி டெய்ரி நிறுவனமாக மாறும் அளவுக்கு வந்திருக்கிறது.

குடும்பத்தின் பால் வியாபாரம் தோல்வி அடைந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக 16 வயதில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பிசினஸை கையில் எடுத்த சதீஷ்குமார், பால் விற்பனையில் அல்லாமல் பால் மதிப்பு கூட்டு பொருள்களில் மட்டும் தன் தீவிர கவனத்தைச் செலுத்தினார். அவருடைய மாற்று சிந்தனையின் பலனாக மில்கி மிஸ்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டது.

10 கிலோ பனீர் தயாரிப்பில் தொடங்கிய பிசினஸ் இன்று பங்குச் சந்தை வரை வந்திருக்கிறது. சமீபத்தில் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,553 கோடி அளவுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது மில்கி மிஸ்ட். அந்த பங்கு வெளீயீட்டில் பங்குகளை வாங்க அனைவரும் ஆர்வம் காட்டியதில் ஒரே நாளில் ஓவர்சப்ஸ்கிரைப் ஆனது.

மில்கிமிஸ்ட்

மில்கிமிஸ்ட்

ஐபிஓ வெளியீட்டின் வெற்றியைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 18) பங்குச் சந்தையில் பட்டியலாகி தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. பட்டியலாகும்போதே மில்கி மிஸ்ட் பங்கு, அதன் ஐபிஓ விலையான ரூ.140-ஐவிட 18% உயர்ந்து, ரூ.165-ல் பட்டியலானது. அதன் பிறகும் முதலீட்டாளர்கள் பலர் இதன் பங்கு வர்த்தகத்தில் காட்டிய ஆர்வமும் வரவேற்பும் பங்கு விலையை சுமார் 30% வரை உயர்த்தியது. இதனால் மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.14,000 கோடியை எட்டியுள்ளது.

நலிவடைந்த குடும்ப பால் வியாபாரம், பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத 16 வயது சிறுவனுடைய உழைப்பும் விடாமுயற்சியினாலும் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இன்று பங்குச்சந்தையிலும் பட்டியலாகி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பைத் தொட்டிருக்கிறது.

பனீர், சீஸ், நெய் போன்றவற்றில் தென்னிந்தியாவில் முன்னணி பிராண்டாக இருக்கும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரைவில் இந்தியாவின் முன்னணி டெய்ரி பிராண்டாக மாற்றும் முயற்சிகளைத் திட்டமிடுவதாக நிறுவனமும் அதன் தலைவர் சதீஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *