மு.க ஸ்டாலின்
முதல்வராக மு.க ஸ்டாலின் டெல்லி வந்தார் என்றால் பிரதமர் சந்திப்பிற்கான நிகழ்ச்சிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற டி.ஆர் பாலு உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகளையும் பிரதமரை சந்திக்கும் பொழுது உடனடித்து செல்வார். அது நிர்வாக ரீதியில் இருக்கும் சிக்கல்களை எளிமையாக பிரதமரும் முதல்வரும் புரிந்து கொள்ள பயன்பட்டது.
மாநில அமைச்சர்களையும் அழைத்து வருவார். ஆனால் அவர்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களை சந்திக்க அனுப்பி வைத்து விடுவார். பிறகு ஒட்டுமொத்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு விடையளிப்பார்.
அதேபோல பிற கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த நிர்வாகிகள் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்திற்கே வந்து முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினை சந்தித்து விட்டு செல்வார்கள்.

முதல்வர் விஜய்
ஆனால் முதல்வர் விஜய் முந்தைய முதல்வர்கள் பின்பற்றிய மரபுகளை முழுமையாக மாற்றி இருக்கிறார். முதல்வர் விஜய் தனது முதல் டெல்லி பயணத்தின் பொழுது துறை சார்ந்த அமைச்சர்கள் யாரையும் உடன் அழைத்து வரவில்லை. அதேபோல பிரதமர் உடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை ஊடகங்களை சந்தித்தும் கூறவில்லை.
வெறும் அச்சுட்டு அரசு கொடுத்த குறிப்பு மட்டும்தான் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முக்கியம்?
முதல்வர் விஜயின் பாணியையே பின்பற்றி முன்னாள் முதல்வர்களும் வெறும் அரசு குறிப்பை மட்டுமே கொடுத்து சென்று இருக்கலாம்.
ஆனால் தலைநகர் டெல்லியில் இருந்து கொண்டு முதல்வர்கள் தெரிவிக்கக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கையின் அடையாளமாக தான் பார்க்கப்படும்.
ஒரு மருத்துவர் நோயாளி ஒருவரை வெறுமென பார்த்துவிட்டு செல்வதற்கும், `நீங்கள் குணமாகி வருகிறீர்கள் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடுவீர்கள்’ என்று வாய் திறந்து ஆறுதல் சொல்வதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது அல்லவா.
தமிழ்நாடு மக்களுக்கு இந்த இந்த தேவைகள் எல்லாம் இருக்கிறது, இது குறித்து நாட்டின் நிர்வாக தலைவராக இருக்கக்கூடிய பிரதமரை சந்தித்து டெல்லியில் வைத்து நான் வலியுறுத்தி இருக்கிறேன், இது எல்லாம் நிச்சயமாக தமிழ்நாடு கிடைக்கும், இதை நான் மக்களுக்கு உறுதியாக சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை அவர் பயன்படுத்தி இருந்தார் என்றால் அதனுடைய வீரியம் மிகப்பெரியதாக இருந்திருக்கும்.
அதுவும் இல்லாமல் அது வரலாற்று ரீதியிலான ஒரு ஆவணமாகவும் பாதுகாப்பாக மாறி இருக்கும்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து ஊடகங்களை முதல்வர் விஜய் புறக்கணிப்பது என்பது தமிழ்நாடு மக்கள் அவர் குரல் வழி கேட்க விரும்பும் செய்தியை அவர் தர மறுக்கிறார் என்பதுதான் என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!.