100 ஆடுகளை பணியமர்த்திய பிரபல கார் நிறுவனம்.. சீமான் பாணியில் இறங்கிய தொழிற்சாலை.. பின்னணி இதுதான் | Why did Poland Volkswagen replaced lawnmowers with 100 sheep? details here

Spread the love

International

oi-Nantha Kumar R

வார்சா: போலந்து நாட்டில் பிரபலமான வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த நிறுவனம் திடீரென்று 100 ஆடுகளை பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. ஆடுகளை ஏன் இந்த நிறுவனம் திடீரென்று பணியமர்த்தி உள்ளது? என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம். அதற்கான விடையை இங்கு தருகிறோம்.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் நிறுவனம் தான் ‘வோல்க்ஸ்வேகன்’. இந்த நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த வகையில் போலந்து நாட்டின் போஸ்னான் என்ற நகரில் ‘வோல்க்ஸ்வேகன்’ நிறுவனத்துக்கு கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் விஎம் இ-கிராஃப்டர் வேன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

why-did-poland-volkswagen-replaced-lawnmowers-with-100-sheep-details-here

இந்த கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதி என்பது ‘சோலார்’ மின்திட்டம் வழியாக பெறப்பட்டு வருகிறது. இதற்காக கார் தயாரிப்பு தொழிற்சாலையின் அருகே பிரமாண்டமாக ‘சோலார் பேனல்கள்’ அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தரையில் ‘ஸ்டேண்ட்’டுகள் உதவியுடன் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 31 ஆயிரத்துக்கும் அதிகமான சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தரையில் வளரும் புற்களால் பிரச்சனைகள் வருகிறது. இந்த புற்கள் இயந்திரம் கொண்டு வெட்டப்பட்டு வந்தது. இப்படி செய்யும்போது இயந்திரத்தில் இருந்து சத்தம் வரும். அதேபோல் இயந்திரத்தை இயக்க தேவையான எரிபொருளில் இருந்து கார்பன் வெளியாகி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி இந்த பணிக்கு தனியாக ஆள் கூலியும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் புற்களை அகற்றும் பணியில் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு பதில் ஆடுகளை கொண்டு வந்துள்ளது ‘வோல்க்ஸ்வேகன்’ நிறுவனம். இதற்காக மொத்தம் 100 செம்மறி ஆடுகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இந்த செம்மறியாடுகள் ‘வோல்க்ஸ்வேகன்’ நிறுவனத்தின் ‘சோலார் பேனல்கள்’ உள்ள இடத்தில் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆடுகள் ஆங்காங்கே சுற்றி வந்து புல்களை சாப்பிடுகிறது. இது புல்வளர்வதை கட்டுக்குள் வைக்கிறது. இதன்மூலம் இயந்திர பயன்பாடு, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆள் கூலி இல்லாமல் போகிறது.

அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் ‘சோலார் பேனல்கள்’ மூலமாக மின்சாரம் கிடைப்பதோடு, கால்நடைகளும் வளர்க்கவும் முடியும் என்கிறது ‘வோல்க்ஸ்வேகன்’ நிறுவனம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘சோலார் பேனல்’ தகடுகளுக்கு அடியில் வளரும் புல்களை ஆடுகள் கொண்டு மேயவிட்டு கால்நடைகளை வளர்க்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனம் சார்பில், ”தற்போது 100 செம்மறியாடுகள் அனுபவம் வாய்ந்த ஆடு வளர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சேனல் பேனல் பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது. இலையுதிர் காலம் முழுவதும் இந்த ஆடுகள் இங்கேயே இருக்கும். இது ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ (agrivoltaics) என்று கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஒருங்கிணைக்கும் முறை என்று சொல்லப்படுகிறது.

‘போஸ்னான் லைஃப் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் (Poznan University of Life Sciences) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பல்லுயிர் பெருக்கம், கால்நடை வளர்ப்பு, மண்ணின் தரம் குறையாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுப்பது, தாவரங்களின் வளர்ச்சி, சேலார் பேனல்களை சுற்றிய மைக்ரோகிளைமேட் ஒரே நிலையில் வைப்பது உள்ளிட்ட பயன்கள் கிடைக்கிறது” என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்சார்பு பொருளாதாரம் பற்றி மேடைகள் தோறும் பேசி வருகிறார். சோலார் பேனல்களில் மின் உற்பத்தி, ஆடு மாடு வளர்ப்பு உள்ளிட்டவற்றை அவர் எடுத்து கூறி வருகிறார். அந்த வகையில் சீமான் பாணியில் சேலார் பேனல்களில் மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் வளரும் புற்களை சாப்பிட்டு ஆடுகளை வளர்க்கும் பணியில் ‘வோல்க்வோகன்’ நிறுவனம் தொடங்கி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *