கர்நாடகாவில் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமார் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு டி.கே.சிவக்குமார்தான் முதல்வராக வர இருந்தது. டி.கே.சிவக்குமார்தான் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைக்க முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமைதான் சித்தராமையாவை முதல்வராக்கியது.
இதனால் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிகாரப்போட்டி இருந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் கட்சி தலைமை நிர்வாகிகளை சந்திக்கும்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.
ஏற்கனவே தலைமை பிரச்னையால்தான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதே போன்ற ஒரு நிலை கேரளாவிலும் வரும் அபாயம் இருந்தது. தற்போது முதல்வராக இருக்கும் சதீசனுக்கு பதில் வேணுகோபாலை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டது.
ஆனால் பிரச்னையாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்து சதீசனுக்கே கட்சி தலைமை முதல்வர் பதவியை வழங்கியது. கேரளா பிரச்னை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் டி.கே.சிவக்குமார் காய்நகர்த்த ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிக்குள் தலைமைக்கான அதிகாரப்போட்டி இருந்தால் அது தேர்தலை சந்திக்கும்போது கட்சிக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருதி கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்தது.
இதற்காக முதல்வர் சித்தராமையாவை கட்சி தலைமை டெல்லிக்கு அழைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. புது டெல்லியில் நடைபெற்ற, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.