பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு! | assault on journalists – case registered under three sections against Sholinghur tvk mla

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் த.வெ.க எம்.எல்.ஏ கபில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார். சோளிங்கர் சுமதி திரையரங்கில் `ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம் உள்ளூரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் மைக்கை நீட்டி ரிவ்யூ கேட்டபோது, கைநீட்டி அவரை அடிக்கப் பாய்ந்தார் கபில்.

இந்தக் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ கபில் தனது தம்பியுடன் சென்று இன்ஃப்ளூயன்சரை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் நடந்தபோது, தினகரன், தினமலர் பத்திரிகைகளின் அந்தப் பகுதி நிருபர்கள் அரங்கநாதன், கல்யாணசுந்தரம் ஆகியோர் தங்களின் செல்போனில் படம் பிடித்திருக்கின்றனர். இதனால், கடுப்பான எம்.எல்.ஏ கபில், இரு நிருபர்கள்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யுடன் எம்.எல்.ஏ கபில்

முதலமைச்சர் விஜய்யுடன் எம்.எல்.ஏ கபில்

இத்தனைக்கும் கபில் ஒரு மருத்துவர். த.வெ.க-விலும் மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். ஆனால், அவரே பொறுமையிழந்து அடாவடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் மீதான இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், எம்.எல்.ஏ கபில் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகத்தின் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை தாக்கிய புகாரில் த.வெ.க எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரின் தம்பி தனஞ்செழியன் ஆகிய 2 பேர் மீதும் பொது இடத்தில் தகாத சொற்களால் பேசுதல், உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் சோளிங்கர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *