International
oi-Nantha Kumar R
காத்மாண்ட்: நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் உள்பட மொத்தம் 400க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட இந்த வெள்ளத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திபெத்தில் இருந்து வரும் ஆறுகளில் சுனாமி அலை போல் இந்த வெள்ளம் சீறிப்பாய்ந்தது. கண்இமைக்கும் நொடியில் பல்வேறு ஆறுகளில் கிடுகிடுவென அதிகரித்த வெள்ளம் மொத்தம் நாட்டையும் உலுக்கி போட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் போட்டிகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் வரை பலியாகி உள்ளனர். நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 105 இந்தியர்கள் உள்பட மொத்தம் 200க்கும் அதிகமான வெளிநாட்டினர் மாயமாகி உள்ளனர்.
இதுதவிர உள்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களும் 200க்கும் அதிகமானவர்கள் மிஸ்ஸாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாயமானவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. இதுபற்றி ‘பிளாண்ட் லேப்’ சார்பில் செயற்கைகோள் படங்கள் அடிப்படையில் நேபாளத்தின் தேசிய பேரிடர் மற்றும் லோண்மை ஆணையம் கூறியுள்ளதாவது:
”முதற்கட்ட தகவலின்பேரில் நேபாள – சீன எல்லைக்கு அருகே பனிப்பாறை திடீரென்று சரிந்தது. இந்த பனிச்சரிவு ரசுகவதி எல்லையை கடக்கும் இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் நடநதது. இதனால், ‘லெண்டே’ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதான் நேபாளத்தின் ரசுவா மாவட்டம் வழியாக கீழ்நிலை ஆற்று பகுதிகளில் வெள்ளமாக பாதிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல், ‘சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம்’ (ICIMOD) சார்பில் உள்ள நிபுணர்கள் கூறுகையில், ”பனிப்பாறையில் இருந்து ஏற்பட்ட பனிச்சரிவே நேபாளத்தின் இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். போட்டிகோஷி (Bhotekoshi) ஆற்றின் துணை ஆறாக லெண்டே கோலா (Lhende Khola) ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தான் அதிகபட்ச வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. “லெண்டே கோலா ஆற்றில் கடந்த 14 மாதங்களில் இருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்முறை, நேபாள பகுதியில் உள்ள பனிப்பாறை சரிவால் வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம். ஆற்றுக்குள் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.
அதேவேளையில் ஜெர்மன் புவி அறிியல் ஆராய்ச்சி மையம் சார்பில், ”நேபாளம் – திபெத் எல்லையில் வெள்ளத்தை பார்த்து பொதுமக்கள் ஓடுவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்பாக 4.4 என்ற ரிக்டர் அளவில் பனிப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளது. இதனால் இந்த நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள்கூறுகின்றனர்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக ரசுவா மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதேபோன்ற திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மலைப்பகுதியில் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக அண்டை நாடான திபெத்தில் இருந்த பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்தது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.