Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு அறிவிப்பு என்று பயிர்க்கடன் தொடர்பாக மாற்றி மாற்றி முதல்வர் விஜய் அறிவித்து வருகிறார். ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் முதல்வர் விஜய் எம்எல்ஏ-க்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கார் மட்டுமல்லாமல் அதற்கான பராமரிப்பு மற்றும் பெட்ரோல் செலவுகள், உதவியாளர்களுக்கான படி என்று ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது விவசாயிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதேபோல் திமுக எம்எல்ஏ-க்கள் 59 பேருக்கும் கார் வேண்டாம் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த 3 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 4 முறை வந்துவிட்டேன். நான் வரவில்லை என்றாலும், அரசே கைது செய்து அழைத்து வந்துவிடுகிறார்கள். தஞ்சாவூரில் பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். நாம் பேசவில்லை என்றாலும், கீழே இருந்து பேசி மாட்டிவிட்டுவிடுவார்கள்.
ஆனால் கைது நடவடிக்கைக்கு பயந்தவர்கள் அல்ல நாம்.. டம்மி முதல்வர், வெக்கங்கெட்ட முதல்வர் அமைந்துள்ளார்னு சொன்னேன்.. அதற்கெல்லாம் கோபம் வரவில்லை.. ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லைனு சொன்னதும் கோபம் வந்துவிட்டது. இந்த டெல்டா மண்டலம் திமுகவின் கோட்டை.. டெல்டாவில் உள்ள 30 தொகுதிகளில் 4ல் மட்டுமே தவெக வென்றிருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்த பின் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள் தான்.. ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை, இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றேன்.. சிறப்பு தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை. அதற்கு நிதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்று கூறிவிட்டார்கள்.. ஆனால் எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்க மட்டும் நிதி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை, 6 கேஸ் சிலிண்டர், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் என்று எதையும் கொடுக்கவில்லை. ஆனால் கார் கொடுக்கிறார்களாம்.. ஆளுங்கட்சியினர் சட்டசபையில் அடிக்கும் கூத்தை அனைவரும் பார்க்கிறீர்கள்.
சட்டசபையில் கேள்வி கேட்டு பதில் அளிப்பார்கள். ஆனால் பாட்டு பாடிக் கொண்டிருப்பார்கள். திமுக கேட்கும் எந்த கேள்விக்கும் முதல்வர் விஜய் எழுந்து பதில் அளிப்பதில்லை. எந்த கேள்வியாக இருந்தாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் அளிப்பார்கள். அதுவும் டைவர்ஷன் செய்யவே பேசுவார்கள். 3 மாதங்களில் மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது.. ரீடிங் ஒழுங்காக எடுப்பதில்லை என்று செந்தில் பாலாஜி கூறினார்.
ஆனால் அதற்கு பதில் அளிப்பதில்லை. அவர்களுக்கு தேவை 4 ரீல்ஸ் தான்.. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக 11.19% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இருந்தது. அதனை பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனை பற்றியும் முதல்வர் விஜய்க்கு கவலை கிடையாது. தவெக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.