’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.
திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.
தனது தந்தையைக் கைது செய்ததில் சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை என அவரது மகன் அக்ஷய் பேசியிருந்ததை ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் டீமானது திமுகவின் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோரின் கண்டனங்களுக்குப் பிறகு வீடியோவை டெலீட் செய்து வருத்தமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அக்ஷயிடம் பேசினோம்.

‘’பரிதாபங்கள் டீமுடைய எத்தனையோ வீடியோக்களை இதுக்கு முன்னாடி பார்த்து நானே ரசிசிருக்கேன். நானே அவங்க ரசிகன்தான். அன்னைக்கு என்னை ட்ரோல் செய்திருந்ததையும் பார்த்தேன். நான் சட்டம் படிச்ச மாணவன். சட்டப்பிரிவுகள் எனக்கு நல்லாவே தெரியும்.
ஒருத்தர் கால் ஊனமுற்றவரா இருந்தா அதை வார்த்தைகளால் குறிப்பிடறது மாதிரிதான் அவருடைய நடையை நடந்து காட்டுவதும். அதுவும் உருவக்கேலிதான். உதாரணத்துக்கு இதைச் சொல்றேன். அதேபோலத்தான் ஒருவருடைய குரல் சரியில்லைனா அதைச் சுட்டிக்காட்டி அவர் பேசுவது போலவே பேசி கலாய்ப்பதும் தப்புதான்.