பல கோடி வேல்யூ.. ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் உற்பத்தி.. அசரடித்த நாட்டின் முதல் தனியார் தங்க சுரங்கம் | India First Private Gold Mine Inaugurated in Andhra Pradesh’s Swarnagiri by CM Chandrababu Naidu

Spread the love

India

oi-Vigneshkumar

அமராவதி: நாட்டிலேயே முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தங்கச் சுரங்கத்தைத் திறந்து வைத்தார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு டன் வரையிலான தங்கத்தை நம்மால் வெட்டி எடுக்க முடியும். நாட்டையே வியக்க வைத்துள்ள இந்த திட்டம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இத்தனை காலம் நாம் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் நமது அந்நிய செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி கூட சமீபத்தில் ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே தங்க உற்பத்தியில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

CM Chandrababu Naidu

தனியார் தங்க சுரங்கம்

அதாவது உள்நாட்டிலேயே தங்கத்தை வெட்டி எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணகிரி பகுதியில் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கத் திட்டம் நேற்று புதன்கிழமை தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார். ஜியோமைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால், சுமார் 405 கோடி ரூபாய் முதலீட்டில் 598 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம், நாட்டின் சுரங்கத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

வேலைவாய்ப்புகள்

சுரங்கம் அமைந்துள்ள இந்த இடத்தின் பெயர் முதலில் ஜொன்னகிரி என்று இருந்தது. இப்போது தங்க சுரங்கம் திறக்கப்பட்டுள்ளதால் இந்த இடத்தின் பெயரை ‘ஸ்வர்ணகிரி’ என்று மாற்றுவதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஸ்வர்ணகிரி தங்கச் சுரங்கத் திட்டம் சுமார் 700 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதில் 80 சதவீதப் பணியாளர்கள் உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

மேலும், இதன் மூலம் ஆந்திர அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 57 கோடி ரூபாயும், உற்பத்தி 900 கிலோவாக உயர்ந்தால் 144 கோடி ரூபாய் வரையிலும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒரு டன் தங்கம்

கடந்த மே மாதம் சோதனை முறை உற்பத்தியைத் தொடங்கிய இச்சுரங்கம், தற்போது வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்குகிறது. வரும் 2026-27 நிதியாண்டில் சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் ஆண்டு உற்பத்தி படிப்படியாக உயர்ந்து ஒரு டன்னாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது சுத்திகரிப்புப் பிரிவுக்கான அடிக்கல்லையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டுகிறார். இந்த விரிவாக்கத்தின் மூலம் வருடாந்திர உற்பத்தி இரண்டு டன்களாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தேவையான நீர் விநியோகத்திற்காக, ஹண்ட்ரி நீவா திட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்தியச் சுரங்கத் தொழிலில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்று டெக்கான் கோல்டு மைன்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மொதாலி ஹனும பிரசாத் தெரிவித்துள்ளார்.

வருவாய் அதிகரிக்கும்

இது தொடர்பாக ஆந்திர அரசு சுரங்கத் துறை செயலாளர் முகேஷ் குமார் மீனா கூறுகையில், “சிகுர்குண்டா-பிசநத்தம் பகுதியில் 2.2 மில்லியன் டன்னுக்கும் அதிகமான தங்கு தாத்துக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தற்போது ஏலம் விடப்பட்டு வருகிறது” என்றார். இது தவிர, அனந்தபூர் மாவட்டத்தின் ராமகிரி போன்ற பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியார் பங்களிப்புடன் அதிநவீன முறையில் தங்கச் சுரங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளதாகக் கூறிய அவர், இது மாநிலத்தில் புதிய முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் ஈர்க்க உதவும் என்றார். இதன் காரணமாக எதிர்காலத்தில் ஆந்திரா தங்க உற்பத்தியில் மிக பெரிய மாநிலமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *