தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “பழநி கோயில் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது.

பழநி கோயில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே சொல்லலாம்.
சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற வேண்டும்.
`இந்த அரசுக்கு நேரடியாக இதில் சம்பந்தம் இருக்கிறது. அமைச்சர்கள் அதில் 31 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ என்பது போன்று வெளியாகும் கருத்துகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அந்த மாதிரியான எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை கொண்டு வந்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.
அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.