பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளார் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் நிலத்தை விற்க முயன்றதாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் 4 பேரை கைதுசெய்திருக்கின்றனர்.
இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் ஜாமீன் பெற்றுள்ளதோடு கடந்த நான்கு நாள்களாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நில மோசடி தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அன்னபூரணி சிவகுமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பிரதீப் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள் .

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வந்தது. அப்போது, ‘எதன் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்?” என சிபிசிஐடி தரப்பிலும், அரசு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ‘அரசு அலுவலர்களோடு இணைந்தே இந்த முறைகேடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.