International
oi-Nantha Kumar R
காபூல்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் தாலிபான்கள் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி உள்ளன. இதனால் போர் சூழல் உருவாகி உள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே தற்போது அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. கடந்த 28 ம் தேதி பாகிஸ்தான் சார்பில் ஆப்கானிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 28 பொதுமக்கள் பலியானதோடு, 49 பேர் காயமடைந்ததாக ஐநா சார்பில் தகவல்கள் வெளியானது.

இதற்கு இன்று ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி கைபர் பக்துன்வா மாகாணத்தில் சரண் என்ற பகுதியில் அமைந்து இருக்கும் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஐஎஸ்ஐஎஸ்- கே அமைப்பினர் பதுங்கும் இடமாக பயன்படுத்தியதால் ‘அட்டாக்’ மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பலுசிஸ்தானில் சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களின் ராணுவத்துறை சார்பில் கூறியுள்ளதாவது: ”பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் ஐஎஸ்ஐஎஸ் – கே அமைப்பினர் பதுங்கும் இடமாகும். இவர்கள் ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்களை கொன்றுவிட்டு பாகிஸ்தானில் பதுங்கி விடுகின்றனர். இதனால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் துல்லியமான தாக்குதலாகும். இந்த தாக்குதல் அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் ” என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் சார்பில், ”ஆப்கானிஸ்தானின் 4 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்” என்று வார்னிங் செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. போர் சூழல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள ஐஎஸ்ஐஎஸ் – கே அமைப்பை ஆங்கிலத்தில் Islamic Sate – Khorasan என்பார்கள். சுருக்கமாக ISIS-K என்பார்கள். இந்த அமைப்பினர் முதலில் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்பினருடன் சேர்ந்து செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு பிரிந்தனர். 2015ல் இந்த அமைப்பை உருவாக்கினார். இவர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் இஸ்லாமிய நாடுகள் ஆளப்பட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். குறிப்பாக ஷியா இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த அமைப்பு பல நாடுகளில் தாக்குதல்களை நடத்தி கொன்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் இந்த அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இதனால் தான் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் இந்த அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.