International
oi-Mani Singh S
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வரும் பலுசிஸ்தானியர்கள், தற்போது அந்த நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூறி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பலுசிஸ்தானியர்கள் விடுதலை பெற்றுவிட்டதாக கூறி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருப்பதாகவும், அது தொடர்பான பதிவுகள் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமாக இது அமைந்துள்ளது. பெரும் இயற்கை வளங்களை கொண்ட இந்த மாகாணத்தில் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினருடன் பலுசிஸ்தான் கிளர்ச்சி குழுக்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுதந்திரம் பெற்றுவிட்டோம்
இந்த நிலையில் பலுசிஸ்தானியர்கள், பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக பலுசிஸ்தான் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. எனினும், பலுசிஸ்தான் பெயரில் வெளியாகியிருக்கக் கூடிய அந்த அறிக்கை எந்த அளவு நம்பகத்தன்மை கொண்டது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலுசிஸ்தான் பிராந்தியத்தில் 85 சதவீதம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பலுசிஸ்தானியர்களுக்கென தனி அரசியல் நிர்வாக அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ரணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் இருந்தவர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பலோச் பக்கம் வந்து இருக்கிறார்கள்.
தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது
தற்போது எங்கள் சொந்த செக்யூரிட்டி மற்றும் பாதுகாப்பு படைகளுடன் மாநிலத்தை நிர்வகித்து வருகிறோம். எங்களிடம் போர் விமானங்கள், அட்டாக் ஹெலிகாப்டர்கள், டேங்கர்கள், ஏவுகணைகள், தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கள் நிலத்தை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். 50 ஆயிரம் வீர்களை கொண்ட ராணுவம், விமானப்படை, கப்பல் படை மற்றும் சிவில் நிர்வாகம், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்ற தயாராக இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தங்களுக்கென தனி கொடி, தேசிய கீதம், பணம் மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவையும் பலுசிஸ்தான் தரப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தங்க சுரங்கம், காப்பர் சுரங்கங்கள், எரிவாயு வயல்கள், நிலக்கரி இருப்புகள் உள்ளிட்டவை அடங்கிய நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாக பலுசிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெறும் நிலை
பலுசிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த நாடு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான தகுதியை பெறும் நிலையை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது. பலுசிஸ்தானை நிர்வகிப்பதாக கூறி வரும் குழு கூறும் போது, பாகிஸ்தான் அதிகாரத்தை இங்குள்ள மக்கள் நிராகரித்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தை விட்டு வெளியேறி பலோச் படையில் சேரும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பலுசிஸ்தான் நாட்டை சர்வதேச நாடுகள் அங்கீகரிக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பலுசிஸ்தான் பெயரில் வெளியாகியிருக்கும் அறிக்கை பற்றி பாகிஸ்தான் தரப்பில் இருந்து தற்போது வரை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.


