International
oi-Velmurugan P
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முப்படைத் தலைவராக இருக்கும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அந்நாட்டின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முப்படைகளின் மீதும் முழுமையான மற்றும் விரிவான அதிகாரங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ராணுவப் பணியாளர்களை ஓய்வு பெறச் செய்யவும், பணிநீக்கம் செய்யவும், பணியில் தக்கவைக்கவும் அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை மாற்றியமைக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சீனாவிற்கு ஆதரவாகவும் வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர் மிர்சா ஃபக்ரூல் வங்கதேசத்தின் அதிபராகி உள்ளார். இந்த இரண்டுமே இந்தியாவிற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் , வங்கதேசத்தில் நடந்துள்ள இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு கவலை அழிக்கும் மாற்றங்கள் ஆகும்.பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளதால், இனி பேச்சுவார்த்தை குறையும். இந்தியா பாகிஸ்தான் எல்லையான மேற்கு எல்லை முழுக்க பதற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் வங்கதேசத்தின் இந்தியாவிற்கு எதிரான ஆட்சிக்கு வந்துள்ளாதால், கிழக்கு பகுதியிலும், வடகிழக்கு பகுதியிலும் சிக்கல்கள் அதிகரிக்கும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளது. இதுபற்றி சற்றே விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானில் ‘பாதுகாப்புப் படைகள் சட்டம் 2026’ மற்றும் திருத்தப்பட்ட ‘தேசியக் கட்டளை அதிகார அமைப்புச் சட்டம் 2010’ ஆகிய இரு புதிய சட்டங்களின் கீழ் ராணுவத் தளபதியாகவும் பொறுப்பு வகிக்கும் ஆசிம் முனீர் பணி நியமனம், பணிநீக்கம் மற்றும் ஓய்வு அளிக்கும் உச்சபட்ச அதிகாரங்கள்
பெற்றுள்ளார்.
முப்படைச் சட்டங்களுக்குட்பட்ட எந்தவொரு நபரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது, பணியில் இருந்து விடுவிப்பது, பணிநீக்கம் செய்வது, தொடர்ந்து பணியில் தக்கவைப்பது அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் சேவை வரம்பைத் தளர்த்துவது போன்ற முழு அதிகாரமும் முனீருக்கு கிடைத்துள்ளது.
முன்னதாக அரசியலமைப்பின் 243-வது பிரிவின் கீழ் பிரதமர் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால், ராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு இது பொருந்தாது என்று இருந்தது. ஆனால் இப்போது முழு அதிகாரம் அசிம் முனீருக்கு கிடைத்துள்ளது.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான விதிகளை பாகிஸ்தான் உருவாக்கும் என்றாலும், இதன் விதிகளை நடைமுறைப்படுத்த நேரடியாக உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பிறப்பிக்கும் அதிகாரம் CDF என்று அழைக்கப்படும் முப்படை தலைவரான அசிம் முனீருக்கு கிடைக்கும்.
அரசியலமைப்புப்படி CDF ஆக இருப்பவரே ராணுவத் தளபதியாகவும் இருக்க வேண்டும் என்பதால், ஆசிம் முனீர் ராணுவத்தைக் கட்டுப்படுத்துவதுடன், கடற்படை மற்றும் விமானப்படை மீதும் கட்டுப்பாடுகள் அவருக்கு வந்துள்ளது. இந்த சட்டம் 2025 நவம்பர் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. CDF அசிம் முனீருக்கு பாகிஸ்தான் நாட்டின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளின் மீதும் அவருக்கு அதிகாரத்தை தந்துள்ளது. பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் அசிம் முனீர் தான் இனி இருப்பார்.
பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த மாற்றம் ஒருபுறம் எனில் இந்தியாவிற்கு எதிரான கொள்கை கொண்ட, அதேநேரம் பாகிஸ்தான், சீன ஆதரவு நிலைப்பாடு கொள்கை கொண்ட பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர் மிர்சா ஃபக்ரூல் வங்கதேசத்தின் அதிபராகி உள்ளார். அண்மையில் வங்கதேசத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்ட பின்னர், இந்தியாவிற்கு எதிராக வங்கதேசம் திரும்பி உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், ரயில் சேவை, வடகிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்து சேவையில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.அதேபோல் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விஷயத்திலும் கவலைகள் அதிகரித்துள்ளது. இந்தியா ஒரே நேரத்தில் மேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள் அபாயத்தை சந்தித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.