பாசம் தரும் பிரச்னைகள்… மகாபெரியவா சொன்ன தீர்வு! – Kumudam

Spread the love

ஜெயாப்ரியன்

ஒரு சமயம் மகாபெரியவாகிட்டே வேத வித்வான் ஒருத்தர், “பெரியவா, என்னதான் நாம உண்டு, நம்ம குடும்பம் உண்டுன்னு இருந்தாலும், ஏதாவது ஒரு சங்கடம் வந்துண்டுதானே இருக்கு… இதுல இருந்து விடுபடவே முடியாதா?” அப்படின்னு கேட்டார்.

அவரைப் பார்த்துப் புன்னகைச்ச மகான், “பசு, பாசம் இதுதான் காரணம். உனக்கு இப்படிச் சொன்னாலே புரிஞ்சுடும். இருந்தாலும் எல்லாருக் காகவும் சொல்றேன்!” அப்படின்னுட்டு பேச ஆரம்பிச்சார்.

“பசுன்னா எல்லாரும் நினைக்கிற மாதிரி, அது கோமாதாவை மட்டும் குறிப்பிடாது. பசுன்னு சாஸ்திரங்கள் சொல்றது, இந்த உலகத்துல உள்ள சகல ஜீவராசிகளையும்! ஆனா, மத்த பசுக்களுக்கு இல்லாத ஒண்ணு, இந்த மனுஷ்யப் பசுக்களுக்கு மட்டும் இருக்கு. அது பாசம். பாசம்னா, தன்னைச் சார்ந்தவா மேல வைக்கிற அன்பு மட்டும்னு நினைச்சுடக்கூடாது. இது என்னோடதுன்னு எதையெல்லாம் நினைக்கிறோமோ, அது மேல எல்லாம் நமக்குப் பாசம் இருக்குன்னு அர்த்தம். அதுதான் ஒவ்வொருத்தருக்கும் வரக்கூடிய பிரச்னைகளுக்குக் காரணம்.

பாசம்னா கயிறுனு அர்த்தம். கயித்துல கட்டின மாடு எப்படி ஓர் எல்லையைத் தாண்டி நகரமுடியாம இருக்கோ, இரு அப்படித்தான் பாசத்துல கட்டுப்பட்டவாளும் அதுல
இருந்து விடுபடமுடியாம தவிக்கிற சூழல் ஏற்பட்டுடறது.

இதுல இருந்து விடுபடணும்னா, அதுக்கு ஒரே வழி ‘பதி’தான். அதாவது, ஈஸ்வரன் மேல பாசத்தை வைச்சுண்டு மத்ததை எல்லாம் விட்டுடணும். அப்படிப் பசுபதிமேல பாசத்தை வைச்சுட்டா, நமக்கு எந்தப் பிரச்னையும் வராது!”ன்னு சொல்லி முடிச்சார், பெரியவா.

ஜயஜய சங்கர… ஹரஹர சங்கர!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *