பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை ? ஜூன் 4-ல் ‘மக்கள் சக்தி இயக்கம்’ கட்சியை அறிவிக்கிறார்! – Kumudam

Spread the love

அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலை தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்தது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.  அண்ணாமலைக்குத் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தொகுதி பொறுப்பாளர் பணி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். 

சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த சிங்கநல்லூர் தொகுதியை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாமல் பிரசாரத்தோடு நிறுத்தி கொண்டார். ராஜ்யசபா எம்பி, மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அண்ணாமலை காத்திருந்தார். 

ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தலை தொடர்ந்து தனிகட்சி தொடங்க முடிவு செய்தார். இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லி சென்ற அண்ணாமலை, இன்று அமித்ஷா, நிதின் நபின், பி.எல்.சந்தோஷ் என பாஜக தலைவர்களை சந்தித்தார். அவர்களிடம் தனது ராஜினாமா குறித்தும், புதிய கட்சி தொடங்குவது தொடர்பாகவும் தகவலை அண்ணாமலை பகிர்ந்துள்ளார். 

டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர், இன்று (ஜூன் 02) பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின் போது, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை கட்சித் தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனது பிறந்தநாளான ஜூன் 4 ஆம் தேதி ‘மக்கள் சக்தி இயக்கம்’ புதிய கட்சியை அறிவிப்பை அண்ணாமலை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *