Nanayam Vikatan – 24 May 2026 – பதற்றத்தை ஏற்படுத்திய பிரதமரின் அறிவிப்புகள், சுமைதாங்கிகளா மக்கள்… இதற்கு இல்லையா ஒரு END?! | prime minister modi’s advice in saving

Spread the love

“பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள், தங்கம் வாங்குவதைத் தவிருங்கள், சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துங்கள், உள்நாட்டுப் பொருள்களையே வாங்குங்கள், வெளிநாட்டுச் சுற்றுலாவைத் தவிருங்கள், இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்” என்று ‘அறிவுரைகளை’ அள்ளி வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், இந்த அறிவுரைகள் மக்களிடையே பதற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடி காலங்களில் பதற்றத்தை அதிகரிப்பது, நல்லரசுக்கு அழகல்ல. வரவிருக்கும் சிக்கல்களை முன்னரே கணித்து, தொலைநோக்கோடு திட்ட மிட்டிருக்க வேண்டும். அந்த வகையில், இந்தியப் பொருளாதாரத்தைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதற்கான ஒப்புதல் வாக்குமூலமே, பிரதமரின் ‘அறிவுரைகள்.’

போர், சர்வதேச அரசியல் சூழல், வர்த்தக வழித்தடங்கள் பாதிப்பு என எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், இவை எதுவுமே புதிது இல்லையே?

ஒரு பக்கம் ‘அறிவுரைகளை’ தெளித்துவிட்டு, இன்னொரு பக்கம் விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அரசு. அதுவும் 5 மாநிலத் தேர்தல்கள் முடிந்த பிறகு. எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல், எரிவாயு என அனைத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்றும், அதற்கான ஆலோசனைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவை வெறும் எரிபொருள்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ரத்த ஓட்டம். அவற்றின் விலை உயர்ந்தால் நாட்டின் பொருளாதார இயக்கமே ஸ்தம்பித்துப் போகும். ஒரு பொருள் விடாமல், ஒரு சேவை விடாமல் அனைத்தின் விலையும் உயரும். அந்த நெருக்கடியை நோக்கி இந்தியா நகரப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அதிக லாபத்தைப் பெற்ற பெட்ரோல் நிறுவனங்கள், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், ‘நஷ்டம்’ என்று கூப்பாடு போடுகின்றன. விலை குறையும்போது மக்களுக்கு அதன் பலனைக் கொடுக்காத நிறுவனங்களுக்கு, விலை உயரும்போதும் மக்கள் தலையில் அதை ஏற்ற எந்த உரிமையும் இல்லை. இதற்கு அரசும் துணைபோவது அவலம்.

போர்க்கால நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் எண்ணெய் எரிவாயு, அந்நியச் செலாவணி இருப்பை அரசால் நிர்வகிக்க முடியவில்லை. மக்கள் மீது சுமைகளை ஏற்ற முனைகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் என்னதான் செய்வார்கள்?

சிறந்த அரசு நிர்வாகம் என்பது நல்ல காலங்களில் சேமிப்பு மற்றும் இருப்பு களைப் பலப்படுத்துவதும், கடினமான காலங்களில் மக்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வதும்தான். லாபத்தைத் தனக்கு வைத்துக்கொண்டு, நெருக்கடி காலங்களில் ‘சிக்கனமாக வாழுங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை கூறுவது, அரசின் நிர்வாகத் தோல்விக்கான விலையை பொதுமக்கள் தலையில் ஏற்றும் செயலே அன்றி வேறில்லை.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *