India
oi-Halley Karthik
பாட்னா: பீகாரில் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முதலமைச்சர் சாம்ராட் சவுத்திரியின் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட முயன்றபோது.. போலீசார் தடியடி நடத்தியிருக்கின்றனர்.
நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ரோட்டில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருப்பது பாஜக அரசின் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

மாணவர்கள் போராட்டம்
பாட்னா காந்தி மைதானத்தில் இருந்து மாணவர்கள் பேரணியை தொடங்கினர். முதலமைச்சர் வீட்டை நோக்கி பேரணி சென்றது. தக் பங்களா சௌராஹா பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள் முன்னேற முயன்றனர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே சென்றது.
தடியடி நடத்திய போலீஸ்
கட்டுப்படுத்த திணறிய போலீசார் தண்ணீர் அடித்து கலைக்க முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் உறுதியாக இருந்த நிலையில், தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து.. போலீசார் கற்களை வீச முயன்றனர் என்று சொல்லப்படுகிறது. கல்வீச்சு சம்பவத்தில் போலீசார் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
மாணவர்களின் போராட்டம் ஏன்?
பீகார் பொதுப்பணி ஆணையம் நடத்தும் ஆசிரியர் நியமன தேர்வு மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் நடந்த 70வது பொதுப்பணி ஆணைய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராகேஷ் குமார் சிங், போராடும் மாணவர்களை தெருவில் குரைக்கும் நாய்கள் என்று அவதூறாக பேசியிருந்தார். இதுவும் மாணவர்களை டென்ஷன் ஆக்கியது. ஆசிரியர் நியமனத் தேர்வை 2 கட்டங்களாக நடத்தாமல், ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கோரிக்கைகள்
ஆசிரியர் நியமன தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், அதில் நெகட்டிவ் மார்க்கிங் முறையை நீக்க வேண்டும், முறைகேடு புகார்கள் எழுந்த 70வது தேர்வை ரத்து செய்ய வேண்டும், பீகார் மாநில மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 100% முன்னுரிமை அளிக்கும் வகையில் டொமிசைல் கொள்கையை அமல்படுத்த வேண்டும், ஒரு வேட்பாளர் ஒரு முடிவு என்கிற கொள்கையை பின்பற்ற வேண்டும், மாணவர்களை அவதூறாக பேசிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த காலங்களில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனர்.