கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாணிக்கம் (வயது: 31) என்பவரிடம் குண்டாங்கல் பாறையில் உள்ள பாட்டி வீட்டில் விடும்படி கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் மாணிக்கம் 4 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் விடாமல் குண்டாங்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த 4 வயது சிறுமியை மாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து, சிறுமி தனது பாட்டியிடம் அழுது கொண்டே நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனது பேத்திக்கு நடந்த கொடுமையைக் கேட்டு வேதனை அடைந்த பாட்டி, அரிவாளுடன் மாணிக்கத்தைத் தேடி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் தேவதானம் பகுதியில் மாணிக்கம் கட்டட வேலை செய்து கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அங்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் அங்கு இல்லை. இதனை அடுத்து, அவரை தேடி திரிந்தபோது குளித்தலை பகுதியில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்தைப் பிடித்து காவல் நிலையத்திற்கு ஒப்படைக்க சாலையில் இழுத்து வந்துள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

10 -க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இந்நிலையில், பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரை விசாரணை செய்து வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணிக்கம், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 4 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.