Cricket
oi-Yogeshwaran Moorthi
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சஞ்சு சாம்சன், மைதானத்தில் சோகமாக நின்று கொண்டிருந்தார். அதனை பார்த்த கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனிடம் கோபமாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டார்.

அவர் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால், சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டார். தொடர்ந்து 3 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கவுதம் கம்பீர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதனிடையே இந்தப் போட்டிக்கு முன் சஞ்சு சாம்சன் – கம்பீர் இருவரும் பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் தாம் பெஞ்ச் செய்யப்பட்டதை ஏற்க முடியாமல் சஞ்சு சாம்சன் விரக்தியுடன் இருக்கிறார். இதனையறிந்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆவேசமாகவும், கோபமாகவும் சஞ்சு சாம்சனிடம் நிலையை பேசுகிறார். இதனால் சஞ்சு சாம்சன் இந்திய அணி நிர்வாகத்தால் மோசமாக நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சு சாம்சன். அவருக்கு இப்படியொரு நிலைமை வரக் கூடாது என்று கூறி வருகின்றனர். இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்றாலும் சஞ்சு சாம்சன் தான் பெஞ்ச் செய்யப்பட்டு வருகிறார். ஆசியக் கோப்பையின் போது சுப்மன் கில் வந்த போது, சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டு பின் பெஞ்ச் செய்யப்பட்டார்.
இதன்பின் இஷான் கிஷன் இந்திய அணிக்குள் வந்த போதும் சஞ்சு சாம்சன் ஃபார்மின்றி ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் மீண்டு வந்து சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். இதனால் சஞ்சு சாம்சன் ஃபார்மின்றி தவிக்கும் போது இந்திய அணி நிர்வாகம் உடனிருக்க வேண்டும் என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.