India
oi-Hema Vandhana
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. 4 கால்கள், 4 கைகளுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.. 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடக்கும் என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார்கள் டாக்டர்கள்.. இதற்கு என்ன காரணம்? சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள லவ்குஷ்நகர் சமுதாய நல மையத்தில் நடந்தது என்ன?
ஹார்வார் கிராமத்தை சேர்ந்தவர் சிவ்சரண் அஹிர்வார்.. இவரது மனைவி ரீட்டா அஹிர்வார்.. இவருக்கு 29 வயதாகிறது.. அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அவருக்கு குழந்தை பிறந்தது..

ஆனால், பிறந்த குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறாக 4 கைகளும் 4 கால்களும் இருப்பதை கண்டு, பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கே அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது.. இப்படியொரு குழந்தை பிறந்ததை பார்த்ததுமே சிவ்சரண், “இது இறைவனின் பரிசு” என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் சொல்கிறார்.
வித்தியாசமாக குழந்தை பிறந்துள்ள தகவல் அதற்குள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் போய்விட்டது. இதனால் அந்த பகுதி சேர்ந்த மக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு கூடிவிட்டனர்.. அத்துடன் இந்த குழந்தையின் போட்டோக்களும் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவி, பலரையும் வியப்படைய செய்து வருகிறது.
4 கால்கள், 4 கைகள்
பிறந்த குழந்தையின் எடை நார்மலாக அதாவது 3 கிலோ எடையை கொண்டுள்ளது.. பிறக்கும்போதே உடலின் மேல் மார்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் கூடுதல் உடல் அமைப்புடன் காணப்பட்டுள்ளது. அந்த கூடுதல் அமைப்புக்கென தனியாக கைகளும் கால்களும் இருப்பதை பார்த்துதான் டாக்டர்கள் வியப்படைந்துள்ளனர்.
பிரசவம் முடிந்ததுமே நர்ஸ்கள் உடனடியாக சீனியர் மருத்துவரும் வட்ட மருத்துவ அதிகாரியுமான (BMO) டாக்டர் லக்கன் சிங்கிற்குத் தகவல் அளித்தார். அவர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்தார். ஆரம்பக் கட்டத்தில் லவ்குஷ்நகர் சமுதாய நல மையத்தில் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தாயும் சேய்யும், பிறகு மேல் சிகிச்சைக்காக சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த பிறப்புக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் டாக்டர்களும் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
நர்ஸ் சவிதா ஆச்சரியம்
லவ்குஷ் நகர் ஹெல்த் சென்டரில், 15 வருடம் \பணிபுரிந்த சீனியர் நர்ஸ் சவிதா இதை பற்றி சொல்லும்போது, “என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை காண்பது இதுவே முதல்முறை.. conjoined twins அதாவது ஒட்டிய இரட்டையர்கள் விஷயத்தில் தாயின் கருப்பையில் 2 குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையில் வளர்ச்சியடைவார்கள்.. ஆனால் இந்த சம்பவத்தில்,ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், கைகளும் கால்களும் வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஆச்சரியம் விலகாமல் சொல்கிறார்.
என்ன காரணம்? டாக்டர்கள் சொல்வதென்ன
மருத்துவ நிபுணர்கள் மற்றும் டாக்டர் லக்கன் சிங் ஆகியோர் சொல்லும்போது”10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடக்கும்.. இது ஹெட்டோபகஸ் கன்ஜெனிட்டல் டிஃபெக்ட் (Heteropagus congenital defect) எனப்படும் மிகவும் அரிதான ஒட்டுண்ணி இரட்டையர் (Parasitic twinning) நிலையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்று தாயின் கருப்பையில் வளரும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று முழுமையடையாமல் பாதியிலேயே வளர்ச்சி நின்றுபோய், மற்றொரு இயல்பாக வளரும் குழந்தையின் உடலில் ஒட்டிக்கொள்ளும் ஒரு அரிய மருத்துவக் கோளாறாகும். எனினும், வெளிப்புறமாகத் தெரியும் உறுப்புகளை மட்டும் வைத்து குழந்தையின் முழுமையான மருத்துவ நிலையை உடனடியாக மதிப்பிட முடியாது” என்று டாக்டர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உயர்தர சிகிச்சை தர முடிவு
தற்போது குழந்தையின் உயிரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் மருத்துவத் துறையும் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குழந்தையையும் தாயையும் உயர்தர மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஹெலிகாப்டர் மூலம் ஜபல்பூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த அதிசயக் குழந்தைக்கு, அங்குள்ள தலைசிறந்த சிறப்பு டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
ஆபரேஷன் எப்போது
அதுமட்டுமல்ல, குழந்தையின் ரத்த ஓட்டம், எலும்புகள், இரத்த நாளங்கள் மற்றும் கூடுதல் உடல் உறுப்புகள் எந்தெந்த உள் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நவீன எக்ஸ்-ரே மற்றும் இமேஜிங் சோதனைகள் மூலம் டாக்டர்கள் துல்லியமாக ஆராயவுள்ளனர்.
இந்த மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் முழுமையாகக் கிடைத்த பிறகே, குழந்தைக்கு மேற்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும், ஆபத்தான இந்த கூடுதல் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்ற முடியுமா என்பது குறித்த இறுதி முடிவையும் மருத்துவர்கள் எடுக்க போகிறார்கள்.
சோனு சூட் நினைவிருக்கா
இதற்கு முன்புகூட, இதேபோல பீகாரில் 4 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.. 4 கை, 4 கால்களுடன் பிறந்த அந்த குழந்தைக்குதான், ஆபரேஷன் செய்வதற்கு நடிகர் சோனு சூட் உதவி செய்திருந்தார்.. இப்போது இன்னொரு குழந்தையும் அதேபோல பிறந்து. மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.. இனி மேற்கொள்ள போகும் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…!!