‘பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!’ – நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

Spread the love

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளராக பால. நந்தகுமார் பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க- வில் இருந்து த.வெ.க-வில் இணையும் நிர்வாகிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மா.செ பால. நந்தகுமார், “பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்’ என சூட்சம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தொண்டர்களுடன் பால. நந்தகுமார்

தொண்டர்களுடன் பால. நந்தகுமார்

அதில் பால. நந்தகுமார், “நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல ஆண்டுகளாக, பல்வேறு பதவிகளில் இருந்து, பதவி சுகத்தை அனுபவித்து, தங்களை வளப்படுத்திக் கொண்டு, அவர்களை நம்பி வந்த எளிய தொண்டர்களையும், பல்வேறு நிர்வாகிகளையும் நட்டாற்றில் நிறுத்திவிட்டு, கழகத்திற்கும், தங்களை நம்பி வந்தவர்களுக்கும், பெரும் துரோகத்தை இழைத்து விட்டு, இன்று தங்கள் சுய மரியாதையை அடகு வைத்து, பொய்க்கால் குதிரையின் கட்சியில் இணைந்து எப்படியாவது, ஏதாவது ஒரு பதவியை பெற்று தங்கள் வயிற்றை வளர்த்து கொள்ளலாம் என்று பகல் கனவு காண்கின்ற பச்சை துரோகிகள் சிலர் கழகத்தின் உண்மையான சில தொண்டர்களையும், சில நிர்வாகிகளையும், மூளை சலவை செய்து பொய்க்கால் குதிரையினுடைய கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கும் பதவி வாங்கித் தருகிறோம் என்று ஏமாற்றி அழைப்பு, விடுகிறார்கள். அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டர்கள் செவி சாய்ப்பதில்லை. எனினும், இந்த பிள்ளை பிடிக்கும் கும்பலிடம் கழகத்தின் விசுவாசிகள், உண்மை தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கழகம் வெல்லும்…. நாளை நமதே… புரட்சித்தலைவரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்… ‘ சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர்காலம் வரும் நம் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்போம். பொது நீதியிலே புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே விழிப்போம்’ ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பால. நந்தகுமாரின் இந்த அறிக்கை த.வெ.க- வில் இணைந்த அ.தி.மு.க நிர்வாகிகளை கொதிப்படையச் செய்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *