Tamilnadu
oi-Rajkumar R
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது ஆற்காடு நகர காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராம் மூலம் அந்த பெண்ணிடம் தமிழக வெற்றி கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் பழகியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்கள் அதற்கு பிறகு தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ஆபாச செய்திகளை அனுப்பிய விஜய் மோகன் பின்னர் அதை வைத்து மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
விஜய் மோகன்
முதலில் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வாங்கி தருவதாக கூறிய விஜய் மோகன் அந்தப் பெண்ணிடம் நிர்வாண படங்களை பெற்றிருக்கிறார். பின்பு அந்த படங்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். தன் பேச்சை கேட்காவிட்டால் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
பாலியல் புகார்
இதனால் அச்சமடைந்த அந்த பெண் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பதவி வாங்கி தருவதாக தன்னை ஏமாற்றி ஆபாச புகைப்படங்களை பெற்று தொந்தரவு செய்ததோடு, மாதவிடாய் காலத்தில் கூட டார்ச்சர் செய்ததாக அந்த பெண் கூறி இருந்தார். மேலும் ஒரு தங்கையாக நினைத்து முதல்வர் விஜய் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தன்னை மிரட்டும் விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்குப்பதிவு
இதற்கிடையே பெண் அளித்த புகாரின் பேரில், முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு விஜய் மோகன் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் புகாரியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலிசார் ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் தனிப்பிரிவு
புகார்தாரர் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பான புகாரை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலும் அளித்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்த விவகாரம் பொதுவெளியில் பெரிதானதை அடுத்து, கட்சியின் ஒழுங்கு மற்றும் நற்பெயருக்குக் களம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக வெற்றிக் கழக தலைமை உத்தரவிட்டுள்ளது.