அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழுவினர், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவரது உத்தரவையும் மீறி, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், த.வெ.க அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால், கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கலையும் தற்போது அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இப்படியான சூழலில், அ.தி.மு.க-வுக்குள் கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து கடந்த இரண்டு நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒரு தொழிலதிபரின் கெஸ்ட் ஹவுஸில் நடந்த பேச்சுவார்த்தையில், எடப்பாடி தரப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலுமணி தரப்பிலிருந்து தங்கமணியும் சி.விஜயபாஸ்கரும் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.
அப்போது, “’25 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகரிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும். தோல்வி குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும். கட்சியை வழிநடத்தவும், நீக்கம் மற்றும் சேர்க்கை தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதற்கும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.
அந்த வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைபடிதான் பொதுச்செயலாளர் நடந்துக்கொள்ள வேண்டும்” என்று வேலுமணி தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதனை அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னபோது, வெடித்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.