ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (மே.23) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.
இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என இரண்டு வருடத்திற்கு முன்பு அரை மணி நேரம், முக்கால் மணி நேரத்தில் முடிவு எடுத்தேன்.
சமீப காலத்தில் எந்தப் படத்திலும் அவ்வளவு சீக்கிரத்தில் நடிக்க முடிவு பண்ணுவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அனைத்துமே சரியாக இருந்தது மாதிரி இருந்தது.
முழுக்க முழுக்க இது ஆர்.ஜே.பாலாஜியின் விஷன்தான். அவர் சொல்லும்போது இது தியேட்டரில் பெரிய ரெஸ்பான்ஸைப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.
நம்பிக்கை வைத்துதான் எல்லா படங்களையும் செய்கிறோம். முதல் மீட்டிங்கிலிருந்தே இந்தப் படத்தில் எல்லா விஷயங்களும் நன்றாக நடந்தன.
அதற்கு உறுதுணையாக இருந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இருந்தது. அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த கருப்ப சாமிக்கு நன்றி.

இது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பார்க்காத பெரிய வெற்றியைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில் நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற இடங்களிலும் இந்தப் படம் கனெக்ட் ஆகியிருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.