புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி பாம் எழில் (எ) எழிலரசன் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெயின்ட்டர் தொழில் செய்பவரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமியிடம் அறிமுகமாகியிருக்கிறார்.
அதையடுத்து கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற எழிலரசன், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, நடந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக சிறுமியின் பெற்றோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரௌடி எழிலரசனைக் கைதுசெய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரான பச்சையப்பன் வாதாடிய இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எழிலரசன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார்.
அத்துடன் சிறுமி கடத்தல் பிரிவில் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்த அவர், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.