“விஜய் பதவியேற்பு விழாவில் அந்த 3 பேர் மிஸ்ஸிங்"- சமுத்திரக்கனி யாரை சொல்கிறார்?

Spread the love

தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “புதிய அரசுக்கு அனுபவம் இல்லை என்று எழும் விமர்சனங்களைத் தாண்டி, அவர்கள் மிகுந்த கவனத்துடன் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தத் தேர்தல் களம் பல்வேறு பரபரப்புகளையும் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சுனாமி போல வந்து, பலரது அரசியல் கணக்குகளைப் புரட்டிப் போட்டுள்ளது. தேர்தலில் பணம், சாதி, மதம் மற்றும் அகங்காரம் ஆகியவை முற்றிலுமாக உடைத்தெறியப்பட்டுள்ளன. பொதுமக்களை முட்டாள்கள் என்று பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். எல்லா கட்சிகளிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, காசே தராத ஒருவருக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்களே ஆகச்சிறந்த அறிவாளிகள்.

தேர்தல் என்ற சுனாமி, அடித்துச் சென்ற போக்கில் சில நல்ல மனிதர்களையும் சேர்த்தே தூக்கிச் சென்றுவிட்டது. குறிப்பாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின், அண்ணன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தோல்வி எனக்கு மிகுந்த கஷ்டத்தை அளித்தது. அதேபோல், அண்ணன் சீமானின் தோல்வியும்… அவரது கட்சியிலிருந்து ஒரு சிலராவது சட்டமன்றத்திற்குள் சென்றிருக்கலாம். அண்ணன் திருமாவளவன் மற்றும் தம்பி அண்ணாமலை ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளே சென்றிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

புதிய அரசுக்குக் கிடைத்த வெற்றி 108 இடங்களுடன் நின்றது. அது 120 இடங்களாக வராமல் போனதற்குப் பின்னால் பிரபஞ்சம் ஒரு பாடம் நடத்தியிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் தோழமை சக்திகள் காட்டிய பிணைப்பும், தேசத்தின் மீது மீண்டும் ஒரு சுமை விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் இறங்கி வந்து கைகொடுத்த விதமும் எனக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது. பல நூறு கோடிகளைச் செலவு செய்த கட்சிகளெல்லாம் இந்தத் தேர்தல் அலையில் எங்கு சென்றன என்றே தெரியாமல் சல்லடையாகிப் போயின.

புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவைத் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவே வியப்புடன் உற்றுநோக்கியது. ஆனால், பதவியேற்பு விழாவின் முதல் வரிசையில் மூன்று முக்கிய நபர்கள் மிஸ்ஸிங். அது எனக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்களின் வீடு தேடிச் சென்று கை குலுக்கும் பண்பாளரான நீங்கள், அந்த மூன்று பேரையும் விட்டுவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எனக்கு இருக்கிறது. உங்களைப் பின்தொடரும் பல கோடி இளைஞர்களுக்கு, குடும்ப அமைப்பின் மீது ஒரு நல்ல பிடிப்பை உருவாக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *