India
oi-Halley Karthik
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் பெல்லட் குண்டு வீச்சால் பார்வையை இழந்த இன்ஷா முஷ்டாக் குறித்த செய்தியை, இந்தியாவில் ஷேர் செய்ய மெட்டா நிறுவனம் தடை விதித்திருக்கிறது. சமீபத்தில் டெல்லி போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது மெட்டாவின் நிலைப்பாடு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இன்ஷா முஷ்டாக் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய முடியாதவாறு மெட்டா பிளாக் செய்திருக்கிறது.

என்ன நடந்தது?
கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி இன்ஷா முஷ்டாக், தனது வீட்டின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பெல்லட் குண்டுகள், இவரின் கண்களை தாக்கியது. இதில் அவரது பார்வை பறிபோனது.
இந்த சம்பவம் நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இன்ஷா முஷ்டாகுக்கு கேஸ் விநியோகஸ்தர் உரிமையை ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கியது. இது குறித்து ‘தி இந்து’ நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியைதான் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய முடியாதவாறு மெட்டா பிளாக் செய்திருக்கிறது.
இந்த கட்டுரைக்கான லிங்கை இன்ஸ்டாவில் ஷேர் செய்தபோது, இந்த கன்டென்ட் இந்தியாவில் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என ஸ்கிரீனில் தெரிவதாக பயனாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள சட்டப்பூர்வ தேவைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மெட்டா விளக்கமளித்திருக்கிறது.
‘தி இந்து’ மட்டுமல்லாது ஸ்க்ரோல் போன்ற பிற மீடியாக்கள் வெளியிட்டிருந்த பெல்லட் குண்டு பாதிப்பு குறித்த பதிவுகளும் ஷேர் செய்ய முடியாதவாறு முடக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.