இறுதியாக நிதியாண்டு 21-க்கான (FY21) நிதிநிலை அறிக்கை வெளிவந்தபோது, அது பல முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நஷ்டம் சுமார் 4,588 கோடி ரூபாயாகப் பெருகியிருந்தது. நம்பிக்கை சரியத் தொடங்கியது. தணிக்கையாளர்கள் விலகியது, ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் மிக மோசமான சிக்னல்களில் ஒன்றாகும்.
டிலாய்ட் (Deloitte) நிறுவனம், நிதிநிலை அறிக்கைகள் தாமதம் மற்றும் தகவல் தொடர்பு இல்லாததைக் காரணம் காட்டி தணிக்கையாளர் பதவியில் இருந்து விலகியது. பின்னர், BDO குளோபல் நிறுவனத்தின் இந்தியக் கிளையும் விலகியது. முதலீட்டாளர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் இது ஒரு பெரிய அபாய சங்கு.
கடன் கொடுத்தவர்கள் குற்றச்சாட்டு
2022-ன் இறுதியிலும் 2023-ன் தொடக்கத்திலும், பைஜூஸ் மற்றும் கடன் கொடுத்தவர்களுக்கு இடையிலான உறவு முற்றிலுமாக முறிந்தது. கடன் நிபந்தனைகளை நிறுவனம் மீறியதாகக் கடன் கொடுத்தவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் வந்த குற்றச்சாட்டுதான் இந்தச் சண்டையின் போக்கையே மாற்றியது.
கடனுடன் தொடர்புடைய சுமார் 533 மில்லியன் டாலர்கள் முறையான அறிவிப்பு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கடன் கொடுத்தவர்கள் கூறினர். சட்ட வழக்குகள் உடனடியாகப் பல நாடுகளுக்குப் பரவியது. அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மற்றும் நியூயார்க்கில் நீதிமன்றத்தில் வழக்குகள் வெடித்தன. கடன் கொடுத்தவர்கள் தங்களை ஆக்ரோஷமாக நடத்துவதாக பைஜூஸ் குற்றம் சாட்டியது. மறுபுறம், நிறுவனம் சொத்துக்களை மறைத்து, வெளிநாடுகளுக்கு நிதியை மாற்றுவதாகக் கடன் கொடுத்தவர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் மற்றொரு அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்தது. 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கடன் கொடுத்தவர்களிடமிருந்து மறைத்து மாற்றுவதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த OCI லிமிடெட் என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின. இந்த பணம் பல நிறுவனங்கள் வழியாகப் பயணித்து, இறுதியாக பைஜூஸ் செயல்பாடுகளுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.
Byju’s |