நான் தெளிவாகச் சொல்கிறேன். சினிமா பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, கண்ணியம், உணவு, போக்குவரத்து, தங்குமிடம் அல்லது மனிதாபிமான வேலைச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. கடினமாக உழைப்பவர்களின் மீது இந்தச் சுமையை ஏற்றக்கூடாது.
நமக்குத் தேவையான மாற்றம் என்பது தேவையற்ற வீணடிப்பு, மோசமான திட்டமிடல், ஊதிப் பெருக்கப்பட்ட உதவியாளர்கள் கலாச்சாரம் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், படப்பிடிப்பு தாமதங்கள் மற்றும் செலவுக்கும் நோக்கத்திற்கும் இடையிலான இடைவெளி ஆகியவற்றில்தான் இருக்க வேண்டும். ஏன் ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் மலர வேண்டும், ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் முடிய வேண்டும்? காதலுக்கு அந்நியச் செலாவணி தேவையில்லை. இந்திய சினிமாவும், இந்தியர்களும் தம்மீதும் நமது அழகான நாட்டின் மீதும் இன்னும் சற்று அதிக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இந்தியத் திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இதுவென நான் நம்புகிறேன். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சங்கங்கள், ஸ்டுடியோக்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், OTT தளங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் பொருளாதார சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒரு விரிவான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
நாமனைவரும் இணைந்து நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளை உருவாக்க வேண்டும். சிறந்த படப்பிடிப்பு ஒழுக்கம், கச்சிதமான கால அட்டவணைகள், ஆடம்பர மற்றும் உதவியாளர்கள் செலவுகளைக் குறைத்தல், உள்ளூர் மாற்றுகள் இருக்கும்போது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், படப்பிடிப்பு தளங்களில் மின்னாற்றலைச் சேமித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செட் அமைப்புகள் மற்றும் பொருட்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல் போன்றவற்றை நாம் முன்னெடுக்க வேண்டும்.