”போதைப் பொருட்களை ஒழிப்பதே எனது லட்சியம்!” ‘சென்னை’ அமைச்சரின் கோட்டையைச் சரிப்பாரா இளைஞர் யுவராஜா? Will young Yuvaraj storm the fortress of the Chennai minister?

Spread the love

ஈரோடு மேற்குத் தொகுதி இப்போது வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல; ஒரு பெரும் அரசியல் சதுரங்கம். ஒருபுறம் ஆளுங்கட்சியின் அதிகார பலம், மறுபுறம் “ஈரோட்டு காமராஜரின்’ பேரன் எனப் பாரம்பர்யப் பின்னணி கொண்ட எம்.யுவராஜா. இந்தத் தேர்தல் யுத்தம் ஈரோட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறதா? இவர் குறித்து கூறிய தொகுதி மக்கள்!

யார் இந்த யுவராஜா? – மாணவர் மன்றம் முதல் மாநிலத் தலைமை வரை!

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பயிலும்போதே மாணவர் மன்றத் தலைவராகத் தன் அரசியல் முத்திரையைப் பதித்தவர் யுவராஜா. நேரு, இந்திரா காந்தி எனப் பெருந்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பாரம்பர்யக் குடும்பத்தில் இருந்து வந்த இவரை, ஜி.கே.வாசன் தனது நம்பிக்கைக்குரிய தளபதியாகவே கருதுகிறார்.

2010 மற்றும் 2013-ல் 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ராகுல் காந்தியால் நேரடியாகக் கவனிக்கப்பட்டவர்.

மக்களோடு மக்களாக… ‘யுவ பாத்’ முதல் கொரோனா காலம் வரை!

கன்னியாகுமரி முதல் சென்னை வரை 54 நாட்கள், 110 தொகுதிகள் வழியாக இவர் மேற்கொண்ட ‘யுவ பாத்’ (Yuva Path) நடைபயணம், இவரது அடிமட்ட மக்கள் தொடர்பைக் காட்டியது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த 8,904 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட போதிலும், ஈரோடு மக்களை இவர் கைவிடவில்லை.

கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று நிவாரணம் வழங்கியது, மாணவர்களுக்கு நீட் தேர்வு கையேடுகள் வழங்கியது எனத் தொகுதியிலேயே தவம் கிடக்கிறார்.

நிறைவேறாத வாக்குறுதிகளும்… ‘நிர்வாகச் சீரழிவில்’ ஈரோடும்!

தற்போதைய ஈரோடு மேற்கு தொகுதியின் நிலைமையைப் பார்த்தால், மக்கள் மத்தியில் பெரும் குமுறல் வெடிக்கிறது. அப்பகுதியில் அமைச்சராக இருப்பவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுகின்றன.

டாஸ்மாக் ஊழல்: மதுவிலக்குத் துறையைக் கவனிக்கும் அமைச்சர், மதுவைத் தடுத்து நிறுத்தாமல் டாஸ்மாக் வருவாயை உயர்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. 24 மணி நேரமும் கள்ள மது விற்பனை நடப்பதாகவும், ‘டெட்ரா பேக்’ மூலம் இளைஞர்களைச் சீரழிக்கத் துடிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர்.

கட்டுப்பாடற்ற போதைப்பொருள் விற்பனையால் பெண்கள் அச்சத்தின் உச்சியில் வாழ்கின்றனர். தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத வகையில் உச்ச பட்ச கட்டிட வரி, குப்பை வரி ஈரோடில் நடைமுறையில் உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட பாலங்கள்: கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்ட ரூ.390 கோடி மதிப்பிலான திண்டல் – காலிங்கராயன் உயர் மட்டப் பாலம் திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாசுபட்ட ஈரோடு: சிப்காட் கழிவு நீரால் காவிரி நீர் மாசுபட்டு, மக்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதை அமைச்சர் தடுத்து நிறுத்தவில்லை என்ற வேதனை மக்களிடம் உள்ளது.

‘சென்னை’ அமைச்சர்: அமைச்சர் பெரும்பாலான நேரங்களில் சென்னையில் இருப்பதாலும், தனது வேட்புமனுவில் சென்னை முகவரியைக் கொடுத்திருப்பதாலும் இவர் ‘சென்னை அமைச்சர்’ என்ற விமர்சனத்தைச் சுமந்து நிற்கிறார்.

யுவராஜா சரி செய்வாரா? – மக்கள் எதிர்பார்ப்பு!

அமெரிக்காவின் IVLP Fellowship பெற்று சர்வதேசத் தேர்தல் முறைகளையும், நவீன நிர்வாகத்தையும் பயின்று வந்த யுவராஜாவிடம் தொகுதி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, நெசவாளர்களுக்குத் தனி வாரியம், மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பாலங்கள் என இவர் கொடுக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கையை விதைக்கின்றன” என்கிறார்கள் தொகுதி மக்கள்.

நிர்வாகச் சீரழிவால் தத்தளிக்கும் ஈரோடு மேற்கை, இளைஞர் யுவராஜா மீட்டு எடுப்பாரா? தேர்தல் முடிவே பதில்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *