போர் செலவுக்கு ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்? 30,000 டிரோன்கள் வாங்க அதிரடி திட்டம்! | Ukraine Plans to Legalise Adult Content to Fund War Against Russia: 30,000 Drones on the Horizon?

Spread the love

International

oi-Shyamsundar I

மாஸ்கோ: ரஷ்யாவுடன் நடக்கும் கடுமையான போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, ஆபாச படத் தயாரிப்பு மற்றும் அந்தத் தொழிலை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள செய்தி இந்த சர்வதேச விவாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது.

உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதிக்குழுத் தலைவரான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் கொண்டுவந்துள்ள புதிய சட்ட மசோதா, ஆபாச பொழுதுபோக்குத் துறையை நாட்டின் அதிகாரப்பூர்வ பொருளாதார வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 2.5 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 25 மில்லியன் டாலர்) வரை வரி வருவாயாகக் கிடைக்கும் என்பது அவரது கணக்கு. இந்தத் தொகையைக் கொண்டு, போர்க்களத்தில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட குறைந்தபட்சம் 30,000 நவீன டிரோன்களை வாங்க முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

Ukraine

தற்போதைய நிலவரப்படி, உக்ரைனில் ஆபாசப் படங்கள் எடுப்பதோ, வைத்திருப்பதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், ஊழல் அதிகாரிகளின் துணையோடு இந்தத் தொழில் அங்கு தொடர்ந்து வளர்ந்துதான் வந்தது.

2022-ல் ரஷ்யா முழுவீச்சில் போரைத் தொடங்குவதற்கு முன்புவரை, அரசு அதிகாரிகள் இந்தத் தொழிலை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பிறகு அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பாளர்களிடம் வரியை வசூலிக்க முயற்சி செய்யத் தொடங்கினர். ஆனால், அங்கேயே ஒரு விநோதமான சிக்கல் உருவானது.

ஒருபுறம் வரி செலுத்தினால், சட்டவிரோதத் தொழில் செய்ததாக வழக்கு பாய்கிறது; மறுபுறம் வருமானத்தைக் காட்டாமல் மறைத்தால், வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பாய்கிறது. இதனைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெலெஸ்னியாக், “இது ஒரு சோகமான நகைச்சுவை நிலைமை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, பிரபல தளமான ஒன்லிஃபேன்ஸ் மூலம் மட்டும் 2023-ல் உக்ரைனைச் சேர்ந்த 7,900 படைப்பாளிகள் சுமார் 13.1 கோடி டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

வரி வசூலிக்கும் அதிகாரிகளின் இந்த முரண்பட்ட அணுகுமுறையால் கடுமையான சிக்கல்கள் உருவாகியுள்ளன. சிலர் முறையாக வரி செலுத்திய பிறகும், அவர்கள் மீது சட்டவிரோத ஆபாசப் படத் தயாரிப்பு மற்றும் வரி ஏய்ப்பு என இரண்டு பிரிவுகளின் கீழும் அரசு கடிதங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

ஒன்லிஃபேன்ஸ் தளத்தில் உள்ளடக்கங்களை வெளியிட்டு வரும் ஸ்விட்லானா டிவோர்னிகோவா என்ற பெண்மணி தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிர்ந்தார். ஒருநாள் காலை தனது மகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தபோது, போலீஸார் அவரது வீட்டைச் சோதனையிட்டு 20,000 டாலர் ரொக்கப் பணம், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கைத் தீர்த்துவிட லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். இதேபோல மேலும் பல பெண்கள் போலீஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, நாட்டை விட்டே வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளுக்காக வாதாடும் லெசியா மிகாலென்கோ என்ற வழக்கறிஞர், “யாரும் நேரடியாகப் பாதிக்கப்படாத இத்தகைய குற்றங்களுக்காகப் போர்க்காலத்தில் காவல்துறையின் நேரத்தையும் வளங்களையும் வீணடிப்பது மிகப்பெரிய தவறு. நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் இது அமைப்பிற்கு தேவையற்ற சுமை” என்று கூறினார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஸ்விட்லானா, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தான் கிட்டத்தட்ட 9 லட்சம் டாலர் வரை வரி செலுத்தியுள்ள ஒரு நேர்மையான குடிமகள் என்றும், தன்னை ஒரு குற்றவாளியாக நடத்தக் கூடாது என்றும் வாதிட்டார்.

அவர் தாக்கல் செய்த மனுவுக்கு ஒரே வாரத்தில் 25,000-க்கும் அதிகமான மக்கள் ஆதரவு கையெழுத்திட்டனர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு எழுந்ததைத் தொடர்ந்து, இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் என அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்தார். கடந்த ஜூலை மாதம் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அடுத்தகட்ட வாசிப்புக்குத் தயாராகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *