போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? | US-Iran Peace Deal: Why Petrol Prices in India Won’t Drop Immediately Despite Hormuz Reopening

Spread the love

International

oi-Prasanna Venkatesh

மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றத்திற்கு முடிவு கட்டும் வகையில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுத்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் உடனடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை போருக்கு முந்தைய நிலைக்கு கொண்டு வராது என்ற அதிர்ச்சி கொடுக்கும் விஷயத்தை எரிசக்தி நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

போர் நிறுத்த அறிவிப்பு என்பது முதல் படியாகவே அமையும் என்றும், முழு அளவிலான உற்பத்தி மீட்சிக்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாது, இதேபோல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனையும் உடனடியாக தீராது..

US Iran Peace Deal

கச்சா எண்ணெய் விலை

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை இன்று கடுமையாக சரிந்துள்ளன. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 5.44% குறைந்து பேரலுக்கு 80.26 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.97% வீழ்ச்சியடைந்து 82.99 டாலராகவும் வர்த்தகமாகிறது.

அதேபோல், மத்திய கிழக்கு எண்ணெய்யின் முக்கிய குறியீடான முர்பான் கச்சா எண்ணெய் விலை 6.88% சரிந்து பேரலுக்கு 77.31 டாலராக குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு விலையும் 2.56% வீழ்ச்சியடைந்து 3.040 டாலராக உள்ளது.

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, எண்ணெய் விநியோக தடைகள் குறையும் என்ற நம்பிக்கை சந்தையில் உருவாகியுள்ளதால் இன்று விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உடனடி பலன் தராது

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், அதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி உடனடியாக அதிகரிக்காது. மத்திய கிழக்கு நாடுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளை மீண்டும் இயக்குவதற்கு நேரம் எடுக்கும்.

குறிப்பாக, சில எண்ணெய் வயல்களை முழு அளவில் இயக்குவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை.

ஹார்முஸ் “திறக்கப்படும்” என்பதன் அர்த்தம் என்ன?

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உலக எரிசக்தி கொள்கை மையத்தைச் சேர்ந்த நிபுணர் டேனியல் ஸ்டெர்னோஃப் கூறுகையில், “ஹோர்முஸ் திறக்கப்படுகிறது என்பதன் அர்த்தம் என்ன, சிக்கித் தவிக்கும் சரக்குகள் எவ்வளவு வேகமாக வெளியேறும் என்பது இன்னும் தெளிவாக இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதாவது, நீரிணை திறக்கப்பட்டாலும் அங்கு காத்திருக்கும் கப்பல்கள், காப்பீட்டு சிக்கல்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் துறைமுக நெரிசல் போன்ற காரணங்களால் வர்த்தகம் உடனடியாக வேகமெடுக்க வாய்ப்பில்லை.

1 கோடி பேரல் உற்பத்தி நிறுத்தம்

கடந்த மூன்றரை மாதங்களாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், மத்திய கிழக்கு நாடுகளில் தினசரி 1 கோடி பேரல்களுக்கும் அதிகமான எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியை மீண்டும் முந்தைய அளவுக்கு கொண்டு வர நிறுவனங்களுக்கு நேரம் எடுக்கும்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் விரைவாக உற்பத்தியை மீட்டெடுக்க முடியும் என்றாலும், அனைத்து நாடுகளும் ஒரே அளவில் விரைவான மீட்சியை அடைய முடியாது.

ஈராக்குக்கு மெதுவான மீட்சி

ஈராக் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி பெரும்பாலும் பஸ்ரா துறைமுகத்தை நம்பியுள்ளது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், ஈராக்கின் உற்பத்தி மீட்சி மெதுவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் நாடு மற்ற நாடுகளை விட அதிக அளவில் உற்பத்தியை குறைத்திருந்ததால், அதன் எண்ணெய் வயல்கள் மீண்டும் இயங்கத் தொடங்க அதிக நேரம் எடுக்கும். சில வயல்களுக்கு ஒரு வருடம் வரை ஆகலாம் என்று எரிசக்தி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நிபுணர்களின் கணிப்பு

எரிசக்தி ஆலோசனை நிறுவனமான வுட் மேக்கன்சி நிறுவனத்தின் படி, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வயல்கள் மூன்று மாதங்களில் 70 சதவீத உற்பத்தியை அடையலாம். ஆறு மாதங்களில் 90 சதவீதத்தை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடைசி 10 லட்சம் பீப்பாய் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும். இந்த மதிப்பீடுகள், உற்பத்தியாளர்கள் கட்டுப்பாடான முறையில் உற்பத்தியை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம் எண்ணெய் சந்தையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், நீண்டகாலத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த உதவும், விலையை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உற்பத்தி மீட்சியின் வேகம் ஒவ்வொரு நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறனைப் பொறுத்து மாறுபடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *