குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன் விபத்தில் இறந்ததிலிருந்து குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கத் தொடங்கினார். வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் மூலம் வரும் வருமானம் குடும்பத்தைச் சமாளிக்கவே போதவில்லை.
இதற்கிடையில், தன் இரண்டு மகள்களின் கல்விக் கனவை நிறைவேற்ற, தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அம்பாஜோகாய் நகரில், அம்ருத் தாவூத் மாரத்தான் போட்டி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களின் 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உள்ளூர் மாரத்தானில் ராமபாய் கலந்துகொள்வது என முடிவு செய்தார்.
அப்படி கலந்துகொண்டு வெற்றிபெற்றால் ரூ.3000 கிடைக்கும். அது தன் மகள்களின் கல்விக்கு உதவும் என நம்பினார். அதன் அடிப்படையில், நேற்று மாரத்தான் போட்டி தொடங்கியது. காலில் ஷூ, ஓடுவதற்கு வசதியான டி ஷர்ட் – டிராக்குடன் வந்தப் பெண்களில் ராமபாய் மட்டும் தனியே சாதாரண புடவையில் வந்து நின்றார். அவருக்கான உடை அணியக்கூட நேரமில்லாமல் ஓடத் தொடங்கினார்.