தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அற்புதமாகப் பதிவு செய்கிறது. கதாபாத்திரங்களின் தனிமை, அவர்களின் மனக்குழப்பம், நினைவுகளின் பாரம் ஆகியவற்றை காட்சிகளின் வழியே உணர்த்தியதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் பணியை அவரது இசை மிகச் சிறப்பாகச் செய்கிறது. படத்தின் பரபர மனநிலையையும், தேவையான காட்சிகளில் நிதானத்தையும் வழங்கியிருக்கிறார் விவேக் ஹர்ஷன்.
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில் இசையும் காட்சிகளும் இணையும் விதம் பார்வையாளர்களுக்கு நல்ல திரையனுபவத்தை வழங்குகிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதை வேறொரு கதையை நோக்கி நகர அது பல கேள்விகளை எழுப்பி, படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக மாறிப்போகிறது. கிளைக்கதைகள் கதையை நகர்த்த உதவினாலும், அதுவரை படம் கடத்திச் செல்கிற உணர்வு நிலைக்கு மாறாக வேறொரு நிலைக்கு அது செல்ல, நமக்கு ஒருவித அயர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தன் அம்மாவைக் காண மகன் அத்தனை முயற்சிகளை எடுக்க, அம்மா அந்த முயற்சியை எடுத்தாரா, இத்தனை ஆண்டுகளாக யாரும் அவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கவில்லையா எனச் சில கேள்விகளும் எழுகின்றன.