டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சர்மா தனது வீட்டு பாத்ரூம்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பாத்ரூம்பில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார்.
அவரை போலீஸார் ஆய்வு செய்தபோது உடலில் வேறு எந்த வித காயமும் இல்லை. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சர்மாவின் மனைவியும் நீதிபதிதான். போலீஸாரின் விசாரணையில் சர்மா முந்தைய நாள் இரவு தனது தந்தைக்கு போன் செய்து தான் மிகவும் சிக்கலில் இருப்பதாகவும், வாழ்வதற்குச் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டவுடன் அவரது தந்தை ராஜஸ்தானில் இருந்து உடனே டெல்லிக்குக் கிளம்பி வந்துள்ளார்.

சர்மாவிற்கும் அவரது மனைவிக்கும் கடந்த இரண்டு மாதங்களாக உறவு சரியில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அடிக்கடி இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர்.
சர்மாவை வீட்டில் மனரீதியாக அவரது மனைவி நிதி மாலிக் சித்ரவதை செய்து வந்ததாகவும், வீட்டில் தனது விருப்பப்படிதான் அனைத்தும் நடக்கவேண்டும் என்று நிதி மாலிக் விரும்பியதாகவும், ஒட்டுமொத்த வீட்டையும் தனது கட்டுப்பாட்டில் நிதி வைத்திருந்ததாகவும் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவி இடையிலான சண்டையைத் தீர்த்துவைக்க குடும்பத்தில் பெரியவர் ஒருவர் முயற்சி செய்தார். ஆனால் அவரும் முடியாமல் விலகிக்கொண்டார்.
சம்பவம் நடந்த நாள் இரவில் இருந்து கணவன் மனைவி இடையே பெரிய அளவில் சண்டை நடந்துள்ளது. அவர்கள் போட்ட சண்டையால் சத்தம் வெளியில் கேட்டுள்ளது. நிதி மாலிக் சத்தம் போட்டு பேசியுள்ளார். ஆனால் சர்மா அழுதுகொண்டு இருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அழுதுகொண்டே சர்மா தனது மொபைல் போனை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றார்.
அதன் பிறகு அவர் வெளியில் வரவேயில்லை. போன் செய்து பார்த்தபோது போன் ரிங்காகிக்கொண்டிருந்தது. ஆனால் எடுக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே சென்றபோது சர்மா உள்ளே தூக்குப்போட்டு இருந்தார்.
போலீஸார் சர்மாவின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களிடம் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். புனே சட்டக்கல்லூரியில் சர்மா படித்தார். 2021ம் ஆண்டு நீதித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.