
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான தொடர் சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே சில அமைச்சர்களின் பழைய வீடியோக்கள், சர்ச்சைக்குரிய பேச்சுகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பான சமூக வலைதள பதிவுகள் விவாதப் பொருளாகியிருந்த நிலையில், தற்போது சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜகுருவிடம் அமைச்சர் பேசுவது போன்ற அந்த ஆடியோவில், சாத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது தொகுதிக்கு வந்து அதிகாரிகளை சந்தித்தது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனது தொகுதிக்குள் மற்றொரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் தலையிடுவது தொடர்பாக அவர் ஆவேசமாக பேசியதாகவும், மீறி நடவடிக்கை எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததாகவும் அந்த ஆடியோவில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த ஆடியோவில், சாத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஒருவர் எதற்காக எனது தொகுதியில் வந்து அதிகாரிகளை சந்திக்க வேண்டும்? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? தூக்கி வைத்து கொன்று புதைத்து விடுவேன். எனது தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரர்களை காலை கூட வைக்க விட மாட்டேன். மீறி வைத்தால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்பேன்” என்று அமைச்சர் பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பேசியதாக கூறப்படும் கருத்துகள் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சரின் இந்த ஆடியோ தொடர்பாக திமுக விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
அதில், ”தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான மோதல்களும், அதைத் தொடர்ந்து வெளியாகும் மிரட்டல் ஆடியோக்களும் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, பொதுவெளியிலும் போனிலும் பகிரங்கமாக வெட்டிப் புதைத்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என்ற ரேஞ்சிற்கு ரவுடிச பாணியில் மிரட்டல் தொனியில் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்?
அதிகார பலத்தையும் கட்சிப் பதவியையும் வைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய போக்கு, ஜனநாயகத்தின் மீதும் சட்டம் ஒழுங்கின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.
வன்முறைப் பேச்சையும் ஆக்ரோஷமான மிரட்டல்களையுமே தீர்வாக நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகளும் இப்படிச் தெருவொழுங்கு அற்ற ரவுடிகளைப் போல நடந்துகொள்வதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் லட்சணமா? இத்தகைய வன்முறைப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மிரட்டலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளது.
புதிய அரசு அமைந்து குறுகிய காலமே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ச்சியாக வெளிவருவது தவெக தலைமைக்கு அரசியல் ரீதியாக சவாலாக மாறியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் கவனமாக செயல்பட வேண்டும் என கட்சி தலைமை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், இந்த புதிய ஆடியோ விவகாரம் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.