குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 வயது பெண் எப்போதும் மொபைல் போனில் மூழ்கியபடி இருந்தார். அவர் எப்போதும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பார். திடீரென சமூக வலைத்தள நண்பர்களைத் தேடி சென்றுவிடுவார்.
இது அப்பெண்ணின் பெற்றோருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது மகளை மொபைல் போன் பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. அவர்கள் தங்களது மகளை கவுன்சிலிங் அழைத்துச் சென்றனர். அதுவும் பயனளிக்கவில்லை.

இது குறித்து அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர் வைஷ்ணவ் கூறுகையில், “மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், கட்டாயக் கட்டுப்பாடும் ஒரு தேவையாக மாறியுள்ளது. மொபைல் போன்களைச் சார்ந்து இருப்பதைக் கடக்க இளம்வயதினருக்கு ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டிய கடுமையான சிகிச்சையை நாங்கள் காண்கிறோம்.
போதைப்பொருள் மற்றும் மதுவைப் போலவே, இது ஒரு புதிய வகை தீவிர போதை பழக்க வழக்கங்களாக மாறியுள்ளது. அங்கு வழக்கமான முறைகள் பெரும்பாலும் வேலை செய்யாது,” என்று கூறினார்.
அந்தச் சிறுமியின் மொபைல் போதை மறுவாழ்வுச் சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களது பெற்றோர் இப்போது பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்களை நியமித்து தங்களது மகளைக் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில், கடந்த சில மாதங்களாகத் தங்கள் குடும்பம் பாதுகாவலர்களுக்கு (Bouncers) பணம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
மொத்தம் 4 பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.