மதுரை ஆவின் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாள்கள், ஆவின் நீல நிற பாக்கெட் பாலை காய்ச்சியபோது பிளாஸ்டிக் நெடி வீசுவதாக மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மக்கள் புகார் தெரிவித்தனர். மக்கள் யாரிடம் சொல்லி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என புரியாமல் தங்களுக்குள் பேசி அங்கலாய்த்தனர்.
இதுபற்றி ஆவின் சங்கத்தின் முன்னாள் ஊழியர் பழனிச்சாமி கூறுகையில், “நாளொன்றுக்கு 1.47 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் மதுரை ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் 1.47 லட்சம் லிட்டர் பாலை, 2.20 லட்ச லிட்டராக மாற்றி, அளவு வாரியாக 40 லட்சம் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அப்படி கொள்முதல் செய்யப்படும் பாலை டேங்கர்களில் ஏற்றும்போது ஆய்வு செய்யும் பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளும், ஆவின் நிர்வாக அதிகாரிகளும் கைகோத்துக் கொண்டு குளறுபடியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்காக பால் பவுடரையும், வெண்ணெய்யையும் கலந்து கொழுப்புச் சத்தை ஏற்றுகிறார்கள். இதற்காகத்தான் அதிகாரிகள் சில டெக்னிக்குகளை செய்கிறார்கள். அதாவது, ஜவ்வரிசி போன்ற சில மாவுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை கலந்து பாலின் எடையைக் கூட்டி விற்பனைக்கு தயார் செய்கின்றனர். 5 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் முறைகேடு நடந்து, பிரச்னையாக வெடித்தது. கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிர்ச்சி கிளப்பினார்.