மதுரை: ‘இரட்டிப்பு லாபம் பெறலாம்’ – ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல் | Madurai: Bitcoin scam gang defrauds people with promises of ‘double profits’

Spread the love

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு, பணம் கொடுத்தவரின் மொபைலில் (FQL EXCHANGE) or (fqlin.com) or (V.G INVESTMENT) என்கிற ஆப்கள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றது.

தொடர்ந்து மொபைல் ஆப்பில் கேட்கப்பட்டுள்ள படி விபரங்கள் பகிர்ந்த பிறகு, அவர் செலுத்திய 50 ஆயிரம் பணத்திற்கு 500 (BITCOIN) மற்றும் போனஸாக 20 காயின் சேர்த்து 520 காயினாக ஆஃப்பில் ஏஜென்ட் மூலம் செலுத்தப்படும்.

இதிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குப் புதிதாகச் சேர்ந்தவருக்கு சிக்னல் (விளையாட்டு போன்று) அனுப்படும்; அதனை ஓகே செய்ய வேண்டும்; அதற்கு 10 முதல் 20 காயின் வழங்கப்படும் என்றும், 45 நாட்களுக்குப் பிறகு, கட்டிய ரூபாய் 50 ஆயிரம் பணத்தை இரட்டிப்பாகப் பெற்றுக் கொள்ளலாம் என ஏஜெண்டுகள் தரப்பில் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதில் பணத்தை முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோர் லட்சங்கள் முதல் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து உள்ளனர் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஏஜெண்டுகள் மூலம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த ஆப் முழுவதுமாக முடக்கப்பட்டதாகவும், இதனால் அதில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து பாதிகப்பட்ட நபர் ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகாரளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி ஏஜெண்ட் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் இந்த மோசடி குறித்தும், இதற்கு ஏஜண்டாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தருமாறு கூறி மேலூர் அரசு கலைக் கல்லூரி முன்பாக ஒன்று கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செல்ல முயன்ற நிலையில், அங்கு வந்த மேலூர் காவல்துறையினர் இதுகுறித்து மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன் இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.  

மேலும் எப்.க்யூ.எல்லில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *