மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என சேலம் ராதாகிருஷ்ணன் என்பது பொது நல வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் 2025ல் விசாரணையின்போது கோயில் தரப்பு மீனாட்சி அம்மன் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடங்கள் தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்தது இருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரணையில், கோயில் தரப்பு வழக்கறிஞர் முரளி: சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காண, அவை வேறு யாருடைய பெயரிலும் உள்ளதா, அப்படி இருந்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் பெயரில் ஆவணங்களை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி தொழில்நுட்ப வல்லுநர்கள், ஸ்தபதியின் அனுமதியின்பேரில் மேற்கொள்ளப்படுகிறது. செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணி முடிந்துவிடும். பிரசாதம் தயாரிக்கும் சமையல்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்படும். அதற்கு டெண்டர் விடப்பட்டு நவீன முறையில் சமையல்கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி எந்த நிலையில் உள்ளது, அது எப்போது நிறைவடையும். டெண்டர் முடிந்து நவீன பிரசாத சமையல்கூடம் எப்போது துவக்கப்படும், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு, மீட்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அரசு தரப்பில் ஜூலை 6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

