மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சி மண்டலச் செயலாளரும், மாநில தொழில் முனைவோர் அணியின் பொறுப்பாளருமான எஸ்.பி.பி கோபிநாத், தனது பதவிகளையும் கட்சி உறுப்புரிமையையும் ராஜினாமா செய்துள்ளார்.
2019-ம் ஆண்டிலிருந்து கட்சியில் பயணித்து வரும் அவர், மிகுந்த மன உளைச்சலுக்குப் பின்னரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று காலையிலேயே எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டேன். கட்சியின் தற்போதைய மந்தமான செயல்பாடுகளுக்கு அதன் பொதுச்செயலாளரே முக்கியக் காரணம்.
முன்னதாக கட்சியை விட்டு விலகி, பலரை பா.ஜ.க-விற்கு அழைக்க முயன்ற அந்தப் பொதுச்செயலாளர், மீண்டும் கட்சிக்குள் நுழைந்து ஒட்டுமொத்த செயல்பாட்டையும் முடக்கிவிட்டார்.
2018-ல் தொடங்கப்பட்டு, முதல் தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றது இந்தக் கட்சி. 2021 சட்டமன்றத் தேர்தலில் Two-tier நகரப் பகுதியில் போட்டியிட்டு 12,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றேன். கமல்ஹாசன் மீதான பற்றின் காரணமாகவே பலரும் இதில் இணைந்தனர்.
நடந்து முடிந்த தேர்தலைப் புறக்கணித்தது எங்களுக்குப் பேரதிர்ச்சியாகவும், ஜனநாயகப் படுகொலையாகவும் அமைந்தது. தேர்தல் புறக்கணிப்பு முடிவு குறித்து அன்றைய தினம் மாலை 6 மணி வரை யாருக்கும் தெரியாது.
அறிவாலயம் சென்ற பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக மட்டுமே கட்சியின் முடிவுகள் எடுக்கப்படுகிறது. உழைத்த தொண்டர்களுக்கு கட்சியில் முறையான மரியாதை வழங்கப்படுவதில்லை.
கட்சியின் வீழ்ச்சி குறித்து தலைவர் கமல்ஹாசனின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பொதுச்செயலாளரால் தடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் புகார்கள் கூட தலைவர் பார்வைக்குச் செல்வதில்லை.
தேர்தலுக்குப் பிந்தைய தோல்விகள் குறித்து எந்தவொரு கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தப்படுவதில்லை. கமல்ஹாசனின் செயல்பாடுகள் நேரடியாகத் தவறாக இல்லாவிடினும், அவர் தொண்டர்களை எளிதில் அணுக முடியாத தூரத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது எங்களுக்குப் பெரும் கசப்பான சம்பவமாக அமைந்தது. கட்சியில் கவிஞர் சினேகனைத் தவிர வேறு யாருக்கும் அரசியல் முதிர்ச்சி இல்லை. தற்போதுள்ள துணைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அரசியல் தெரியவில்லை.
எனது இந்த முடிவைத் தொடர்ந்து, கட்சியில் உள்ள மேலும் பல முக்கிய நிர்வாகிகள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இன்னும் சில நாள்களில் சொசைட்டியில் நல்ல பெயரைக் கொண்டுள்ள முக்கியமான 3 முதல் 4 நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேற உள்ளனர்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினாலும், என் சமூகப் பணிகளும், அரசியல் பணிகளும் தொடர்ந்து தொய்வின்றித் தொடரும். ஆனால் அடுத்தகட்டமாக எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்றார்.