International
oi-Vigneshkumar
சியாட்டில்: கடந்த சில ஆண்டுகளாகவே திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மனித இனம் இதுவரை கண்டிராத 16 புதிய வைரஸ்களை ஏஐ உருவாக்கியுள்ளதாம். ஏஐ எப்படி வைரஸ்களை உருவாக்கியது. இது நல்லதா.. கெட்டதா.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
ஏஐ வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் திரும்பி எல்லா பக்கமும் ஏஐ ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆய்வகத்தில் புதிய வைரஸ்களை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஏஐ வைரஸ்
ஏஐ உதவியுடன் முழுமையான வைரஸ் மரபணுக்களை உருவாக்கி, அவற்றில் சிலவற்றை செயல்படக்கூடிய வைரஸ்களாக உருவாக்கியிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அதேநேரம், இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தவறான கைகளில் சிக்கினால் அது மிக பெரிய சவாலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி- ஹார்வர்டு சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவுகள் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இயற்கையில் காணப்படும் பேஜ் (phage) வகை வைரஸை அடிப்படையாக எடுத்து கொண்டு இதை செய்துள்ளனர். பேஜ் என்பது மனிதர்களை தாக்கும் வைரஸ் அல்ல. இது பாக்டீரியாக்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இந்த இயற்கையான பேஜ்ஜை மாதிரியாக வைத்து, ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆயிரக்கணக்கான புதிய வைரஸ் ஜீனோம்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர். அவற்றில் சுமார் 300 மரபணுக்களை ஆய்வகத்தில் பரிசோதித்தனர். இதில் 16 வைரஸ்கள் செயல்படக்கூடியவை என கண்டறியப்பட்டன. அதாவது மனிதர்கள் இதுவரை பார்க்காத 16 வைரஸ்களை ஏஐ உருவாக்கியுள்ளது.
எப்படி பயன்படும்
மேலும், இந்த செயற்கை வைரஸ்களின் கலவை, இயற்கையாக காணப்படும் வைரஸ்களைவிட E. coli பாக்டீரியாக்களை அழிப்பதில் அதிக திறன் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் மிக முக்கியமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பல்வேறு ஆன்டிபயாடிக்ஸ் சக்தி பெற்றுள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதற்கு பேஜ்களை பயன்படுத்தும் சிகிச்சை முறைகள் குறித்து ஏற்கனவே ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதை இது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.
ஏஐ உதவியுடன் குறிப்பிட்ட பாக்டீரியாக்களை குறிவைத்து தாக்கக்கூடிய பேஜ்களை எளிதாக வடிவமைக்க முடிந்தால்.. எதிர்காலத்தில் ஆன்டிபயாடிக்ஸுக்கு வேலை செய்யாத பாக்டீரியாக்களுக்கு எதிராக இது பக்காவாக வேலை செய்யும். அதாவது நம்மிடைய பரவும் சில மோசமான நோய்கள் பாக்டீரியாக்கள் மூலமாகவும் பரவுகிறது. அந்த பாக்டீரியாக்களை அழிக்க ஏஐ உருவாக்கும் வைரஸ்கள் பயன்படுத்தப்படலாம் என்பதே அவர்கள் கருத்து!
பிரச்சினை இருக்கு
இது குறித்து டோரான்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோய் நிபுணர் ஐசக் போகோச் கூறுகையில், “இந்த ஆய்வில் பாசிட்டிவ் விஷயங்களும் இருக்கிறது. நெகடிவ் விஷயங்களும் இருக்கிறது. இவை ஆன்டிபயாடிக்ஸுக்கு வேலை செய்யாத பாக்டீரியாக்களை அழிக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இது தவறான நபர்கள் கையில் போனால் மோசமான நோய் கிருமிகளை அவர்கள் பரப்பலாம், இது மிக பெரிய ஆபத்தாக மாறக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆய்வில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் பேஜ் வகையை சேர்ந்தவை என்பதால் அவை மனிதர்களை தாக்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குறிப்பிட்ட ஆய்வு மனிதர்களுக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், ஏஐ மூலம் ஜீனோம்களை உருவாக்க முடியும் என்பது எதிர்காலத்தில் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸி இல்லை
அதேநேரத்தில், ஏஐ இப்போது மிகவும் சிக்கலான வைரஸ்களை உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக கருதுவது தவறு என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏஐ இப்போது ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய மற்றும் வடிவமைக்க எளிதான வைரஸ்கலை மட்டுமே உருவாக்கியுள்ளதாம். உதாரணமாக, கொரோனா வைரஸின் மரபணு இந்த பேஜ் மரபணுவை விட சுமார் ஆறு மடங்கு நீளமானது. மரபணு பெரியதாகவும் சிக்கலானதாகவும் மாறும்போது அதை ஏஐ மூலம் சரியாக வடிவமைப்பது ரொம்பவே கஷ்டம் என்கிறார்கள்!
மேலும், ஏஐ வைரஸின் மரபணுவை டிசைன் செய்தாலும், அதன் பிறகு ஆய்வகத்தில் அதை உருவாக்குவது பெரிய பிரசாஸ் என்றும் அதற்கு தனி நிபுணத்துவமும் தேவைப்படுவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்தனர். எனவே, சும்மா ஏஐ இருந்தால் மட்டும் அதை வைத்து யாரும் வீட்டிலேயே ஆபத்தான வைரஸை உருவாக்க விட முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள்!


