பத்தாண்டுகளில் மனித இனத்திற்கு அழிவா?
அவர் அடுத்து சொன்ன விஷயம் தான் எல்லோரையும் உறைய வைத்திருக்கிறது. “ஏஐ-யை உருவாக்கும் நபர்களே, இன்னும் பத்தாண்டுகளில் இது நம் எல்லோரையும் கொன்றுவிடும் என்று உண்மையாக நம்புகிறார்கள். இதுவொன்றும் மார்க்கெட்டிங் ஸ்டன்ட் அல்ல. பல உயர் அதிகாரிகளும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போது அவர்களும் இதே பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். மனிதர்களின் வேறு எந்தச் செயலும் இந்த அளவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தாது,” என்கிறார் ஜேக்கப். இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது அல்லவா?
இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள் என்கிறார் அவர். “இவை விரைவில் மனிதனை மிஞ்சிய சூப்பர்ஹியூமன் சிஸ்டங்களாக மாறும். எதையும் ஹேக் செய்ய முடியும், எந்தத் துறையையும் ஒரே இரவில் புரட்டிப் போட முடியும், உண்மையான அதிகாரத்தையும் வளங்களையும் கைப்பற்ற முடியும். இந்தத் துறைகளில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை நாம் எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் வேகம் குறையவே இல்லை,” என எச்சரிக்கிறார் ஜேக்கப்.
தெரிந்தே ஏன் இந்த ஆபத்தான பந்தயம்?
சரி, இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் இதை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு ஜேக்கப் அளிக்கும் பதில், ஏஐ பந்தயத்தின் மையத்தையே தாக்குகிறது.
“ஓபன்ஏஐ நிறுவனத்தில் உள்ள பலருக்கு, இந்த விஷயம் மனித நாகரிகத்திற்கே எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது இன்னும் முழுமையாக உறைக்கவில்லை. ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இந்த ஆபத்து நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த ரேஸில் முதலில் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வேறு யாரும் பொறுப்பாகச் செயல்பட மாட்டார்கள் என்பதால், தாங்களே இதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இதில் உள்ள ரிஸ்க்கை உணர்ந்தும் இதைச் செய்கிறார்கள்,” என்கிறார் அவர்.
இது ஒரு அகங்காரமான சூதாட்டம் என்றும், ஒரு தனியார் நிறுவனத்தின் ஸ்லாக் (Slack) உரையாடலில் இருந்து தொடங்கப்படக் கூடாத ஒன்று என்றும் அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.
உள்ளே இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஜேக்கப் வெறும் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவில்லை. சிலிக்கான் வேலியின் ஏஐ லேப்களில் இன்னும் வேலை செய்துகொண்டிருக்கும் மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சவாலை விடுத்துள்ளார். “நீங்கள் ஒரு லேப் ஆராய்ச்சியாளராக இருந்தால், அடுத்த சில ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் சிஸ்டத்தின் மனதைப் பற்றி முழுமையாகப் புரியாமல், அதை இயக்க நீங்கள் தயாரா? ‘இது எப்படியும் நடக்கத்தான் போகிறது’ என்று நினைத்து உங்கள் வேலையை மட்டும் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இதுதான் சரியான தருணம் என்று நினைத்து வேறு பாதுகாப்பான பாதைகளைக் கோரப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ஒரு உலகளாவிய பந்தயத்தைத் தடுக்கும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றவில்லை. மாடல்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படலாம்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.