Cricket
oi-Yogeshwaran Moorthi
சவுதாம்டன்: இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பட்லர் 64 பந்துகளில் 8 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 131 ரன்களை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2வது விக்கெட்டுக்கு பட்லர் – ப்ரூக் கூட்டணி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 7 மணிக்கு டாஸ் போடுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் வந்த பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதன் காரணமாக டாஸ் 25 நிமிடங்கள் தாமதமாகியது. இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து 2வது ஓவரிலேயே தொடக்க வீரர் பில் சால்ட் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஹாரி ப்ரூக் – பட்லர் கூட்டணி இணைந்தது. நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும், 2 ஓவர்களில் அதிரடிக்கு திரும்பினர். அதிலும் ஹாரி ப்ரூக் எப்படி போட்டாலும் பவுண்டரி அடிப்பேன்டா என்று விளாசி தள்ளினார்.
அதிலும் அக்சர் படேல் வீசிய ஒரே ஓவரில் ஹாரி ப்ரூக் 25 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 19 பந்துகளில் ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்தார். ஆனால் இதன்பின் பட்லரின் விஸ்வரூபம் எடுத்தார். 34 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பட்லர், அடுத்த ஒவ்வொரு ஓவரிலும் 2 சிக்சர்களை விளாச தொடங்கினார். அதிலும் பிரின்ஸ் யாதவ் வீசிய ஓவரில் 21 ரன்களை விளாசிய பட்லர், 51 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தொடர்ந்து அடைமழையாய் வெளுத்து கட்டிய பட்லர் 64 பந்துகளில் 8 சிக்ஸ் மற்றும் 12 பவுண்டரி உட்பட 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் கடைசி வரை களத்தில் இருந்த ஹாரி ப்ரூக் 45 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 95 ரன்கள் எடுத்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 233 ரன்களை எடுத்து டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது.
இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. இதனால் மைதானத்திலேயே இந்திய அணி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதில் ஒரு சில இந்திய ரசிகர்கள், இந்திய பவுலர்கள் இப்படி பந்துவீசுவதற்கு பதிலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி இன்னும் தாமதமாகவே வந்திருக்கலாம் என்று கலாய்க்க தொடங்கியுள்ளனர்.