மம்தா வீட்டுக்காவல்? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்.. உச்சக்கட்ட பதற்றத்தில் மேற்கு வங்கம்! | Mamata Banerjee House Arrest: Ahead of Visit to Baruipur Victim’s Family, What really happened

Spread the love

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே திரிணாமுல் கட்சிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் மம்தா பானர்ஜி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்திக்கச் செல்ல இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அவரது கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாருய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பாஜக நிர்வாகி ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

West benga mamata

வீட்டுக்காவல்

திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், “பாருய்பூருக்கு செல்ல மம்தா பானர்ஜி திட்டமிட்டிருந்ததை அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதுடன், தடுப்புகளும் அமைக்கப்பட்டு வெளியே செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டார். #JusticeForBaruipur என்ற கோரிக்கை மாறாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார்” என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சூர்யாபூர் பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமி, தனது தோழியின் பிறந்தநாளுக்கான பரிசு வாங்குவதற்காகச் சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். நான்கு பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தபோதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தச் சூழலில் தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, உள்ளூர் மக்கள் சந்தேக நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, சிறுமியின் உடல் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். அதன்படி உள்ளூர் சந்தை அருகே உள்ள குளம் ஒன்றின் அருகில் சாக்குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

போராட்டம்

சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாருய்பூர்-ஜெய்நகர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்களை எரித்து, சில போலீஸ் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரை, சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அபிஷேக் பானர்ஜி

இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறி மேற்கு வங்கத்தில் அரசியல் செய்யும் பாஜக, இதுபோன்ற சம்பவங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேலையையே பாஜக செய்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மம்தா பானர்ஜி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, மேற்கு வங்க நிர்வாகம் மற்றும் பாஜக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *