தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை , ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய “டேட்டா’ அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். முன்பெல்லாம், 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலமாக ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் (வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் போன்றவை) வழங்கும் வழக்கம் இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு முன்னால் மாணவர்கள் வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரைத் தேடிச் சென்றுதான் சான்றிதழ்களைப் பெற முடிந்தது. ஆனால், இப்போது வருவாய்த்துறையே நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று அந்தப் பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல், தற்போது பள்ளிக்கல்வித்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து, மாணவர்களின் முகவரி, கல்வித் தகுதி மற்றும் ஆதார் அட்டை விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை அடையாள அட்டையாக வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்தும் நடைபெறும். ஆனால், இந்த புதிய ‘டேட்டா கார்டில்’ சாதி அடிப்படையில் எந்த விவரமும் இடம்பெறாது.