
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூடத்தில் எம்பி வெங்கடேசன், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எழும் எதிர்ப்புகள் குறித்த பதிலளித்தார்.
“டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவரல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர். அந்த பொறுப்பில் இருந்து அவர் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க மாட்டார். விஜய்க்கு பல அழுத்தங்கள் வந்தபோது உடனிருந்தவர். தவறான நபருக்கு அப்பொறுப்பு வழங்கப்படவில்லை. அவர் டெல்லியிருந்து coordination வேலை மட்டுமே செய்ய போகிறார். இதுவரை அலங்காரமாக இருந்த பதவி, இன்று நம்பிக்கையுள்ள ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு அமைவதற்கு உழைத்தவர்கள் முதலமைச்சரின் ஆலோசகர்களாக இருப்பதில் என்ன தவறு? அனைத்து பொறுப்புகளிலும் பொருத்தமானவர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இஸ்லாமியராக மதம் மாறுபவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அவசரமாக இந்த வழக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில நாட்களில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விபரத்தையும் சேர்ப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், ”செங்கோட்டையன் சொன்னது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சாதி சான்றிதழை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தான் சொன்னார்.
செங்கோட்டையன் சொன்னது போல, அப்படி எந்த திட்டம், யோசனை அரசுக்கு இல்லை. செங்கோட்டையன் அவசரத்தில் தவறுதலாக சொல்லி விட்டார்” எனக்கூறினார்.