காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில், பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். அது தொடர்பாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பயன்படுத்தியே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், அங்கு நடந்த மனிதநேயமற்ற சம்பவங்களை விவரிக்க முடியாது. காவல்துறையினர் பெண்களின் உணர்வுப்பூர்வமான உறுப்புகளில் லத்திகளால் தாக்கியுள்ளனர். பல பெண்கள் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.