Business
oi-Velmurugan P
சென்னை: போலி, நகல் மற்றும் செயல்படாத ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதன்டிப நாடு முழுவதும் போலி ரேஷன் கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காகவே பயோமெட்ரிக் சிஸ்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை கட்டாயமாக்குவதன் மூலம் தேவையற்ற மானிய இழப்புள் குறைந்துள்ளது. அந்த வகையில் போலி ரேஷன் கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டது மற்றும் நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் மானியங்கள் மற்றும் உதவி தொகை திட்டங்களால் மத்திய அரசு ரூ.5.14 லட்சம் கோடி வரை சேமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்தியஅரசு வெளியிட்டுள்ள புள்ளி விவங்களின் படி, நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியதன் மூலம், 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.83,064 கோடி பணம் முறைகேடாக செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் ஒட்டுமொத்தச் சேமிப்புத் தொகை ரூ.5.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகச் சமீபத்திய அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சேமிப்புகள், அரசுக்குக் கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கியுள்ளன. இதனால், நாட்டின் பொதுப் பொக்கிஷத்திற்கு வீண் சுமை தராமல், செலவினங்களின் தரத்தை மேம்படுத்தவும், தகுதியான பயனாளிகளுக்குக் கூடுதல் நலத்திட்ட உதவிகளை நீட்டிக்கவும் அரசுக்கு வழிவகை கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், மத்திய அரசின் முதன்மைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (தற்போது G-RAM-G எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) செலவிடப்பட்ட மொத்தத் தொகையான சுமார் ரூ.4.5 லட்சம் கோடியை விட, 2014-15 முதல் 2024-25 வரையிலான இந்த DBT சேமிப்புத் தொகை அதிகம் ஆகும்.
ரேஷன் மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முன்னிலை
2024-25 நிதியாண்டில் மட்டும், போலி மற்றும் இல்லாத ரேஷன் கார்டுகளை ஒழித்ததன் மூலம் அரசு ரூ.63,000 கோடிக்கும் மேல் சேமித்துள்ளது. மேலும், போலி ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளை நீக்கியதன் மூலம் ரூ.16,829 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை மற்றும் இதர சமூக நலத்திட்டங்களில் இருந்த தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறிந்து நீக்கியதன் மூலமும் கூடுதல் சேமிப்புகள் கிடைத்திருப்பது அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்தள்ளளது.
2014-15ல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்து முக்கிய நலத்திட்டங்களுக்கும் இந்த DBT முறையை விரிவுபடுத்தியுள்ளது. 2025-26 நிதியாண்டில், 328 திட்டங்களின் கீழ் சாதனை அளவாக ரூ.7.51 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. 2014-15 முதல், வங்கிச் கணக்குகள் மூலமான பணப் பரிமாற்றம், மற்றும் ரேஷன் பொருட்கள், உரங்கள் போன்ற பொருட்கள் வடிவிலும் சேர்த்து சுமார் ரூ.51.5 லட்சம் கோடி பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளதாக அரசின் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த DBT சேமிப்பான ரூ.5.14 லட்சம் கோடியில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 6.36 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் கிடைத்த ரூ.3.13 லட்சம் கோடி மட்டுமே மொத்தச் சேமிப்பில் சுமார் 61% என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளத.
சமையல் எரிவாயு மானியம்
1.32 கோடி போலி ஊரக வேலைவாய்ப்பு அட்டைகள் நீக்கப்பட்டதால் ரூ.74,888 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது. இதேபோல், 4.09 கோடி போலிப் பயனாளிகள் மற்றும் மானியம் பெறாத 2.38 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் (தானாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் உட்பட) நீக்கப்பட்டதன் மூலம் மார்ச் 31, 2025 நிலவரப்படி ரூ.74,031 கோடி ஒட்டுமொத்தமாகச் சேமிக்கப்பட்டிருக்கிறது.
பிஎம்-கிசான் மற்றும் உரங்கள்
மேலும், பிஎம்-கிசான் திட்டத்தில் தகுதியற்ற 2.11 கோடி பயனாளிகளை நீக்கியதன் மூலம் அரசு ரூ.22,106 கோடி சேமித்துள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கான உர விற்பனையில் 158.06 லட்சம் மெட்ரிக் டன்கள் குறைந்ததன் மூலமும் ரூ.18,700 கோடி சேமிப்பு கிடைத்திருக்கிறது
மத்திய அரசுக்கு லாபம்
தேவையான நேரத்திற்குச் சரியான நிதி வெளியீடு மற்றும் முறைகேடுகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் இந்த DBT முறையைக் கையாண்டது அரசின் செலவினத் திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இது கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், மத்திய அரசின் மூலதனச் செலவுகள் பல மடங்கு உயரவும், அரசின் கடன் வாங்கும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் பங்களித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு என்ன லாபம்
அரசின் நேரடிய பணப்பரிமாற்றம் காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்தொகை, விவசாயிகளுக்கான நிதியுதவி , மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை போன்ற மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாகச் செல்வதால், லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மாற்றம்
முன்பு போல தமிழ்நாட்டின் பல்வேறு தபால் நிலையங்களிலோ அல்லது அரசு அலுவலகங்களிலோ மாதக்கணக்கில் காத்துக்கிடக்கத் தேவையின்றி, உரிய நேரத்தில் பணம் நேரடியாக ஏழைகளின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. அதேபோல் ரேஷன் விநியோகச் சீரமைப்பு: ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் (கைரேகை) முறை வந்ததால், தமிழ்நாட்டில் உள்ள 2.2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய ரேஷன் பொருட்கள் வெளிச்சந்தைக்குக் கடத்தப்படாமல் சரியாகச் சென்றடைகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ரேஷனில் நடந்த முறைகேடுகள் அடியோடு சரிந்துள்ளன.

